வியாழன், 31 ஆகஸ்ட், 2017

பள்ளி சீருடையில் மாதவிடாய் இரத்தம்: வகுப்பு ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை! August 30, 2017

பள்ளி சீருடையில் மாதவிடாய் இரத்தம்: வகுப்பு ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை!


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவியை வகுப்பு ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்பு திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12 வயதான 7ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டு இரத்தம் கசிந்துள்ளது. மாணவின் சீருடையிலும், அவர் அமர்திருந்த இருக்கையிலும் இரத்தக்கறை படிந்துள்ளது. இதைப்பார்த்த மற்ற மாணவிகள் அந்த மாணவியிடம் இது குறித்து கூறியுள்ளனர்.

இதனால் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்வதற்காக வகுப்பு ஆசிரியரிடம் (பெண் ஆசிரியர்) அனுமதி கேட்டுள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்று சுத்தம் செய்துவிட்டு வந்த மாணவியை, வகுப்பில் இருந்த இருக்கையிலும், சீருடையிலும் இரத்தக்கறை படிந்தற்காக மற்ற மாணவர்களின் முன்பு அந்த ஆசிரியர் திட்டியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியரையும் சந்திக்க சொல்லி வகுப்பைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார். 

இதனால் மிகவும் மனமுடைந்த அந்த மாணவி வீட்டிற்கு வந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு மாடியிலிருந்து கிழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் கடிதத்தை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

பள்ளி ஆசிரியை திட்டியதால் 7ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாளையங்கோட்டை பகுதியிலும் மற்ற மாணவிகளின் பெற்றோர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.