வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

ட்விட்டரை வாங்கி ட்ரம்பை வெளியே துரத்தக் காத்திருக்கும் முன்னாள் CIA உளவாளி! August 24, 2017

ட்விட்டரை வாங்கி ட்ரம்பை வெளியே துரத்தக் காத்திருக்கும் முன்னாள் CIA உளவாளி!


அமெரிக்காவின் முன்னாள் ரகசிய சி.ஐ.ஏ அதிகரி ஒருவர், டொனால்ட் ட்ரம்பை வெளியேற்றுவதற்காக ட்விட்டரை விலைக்கு வாங்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடியைப் போலவே ட்விட்டரில் படு ஆக்டிவாக இருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப். அமேசான் நிறுவனம் சிறுவியாபாரிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது எனவும் இதனால் பலர் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் எனவும் ஒரு ட்வீட்டை போட்டார் ட்ரம்ப். இதையடுத்து இ-மார்கெட்டின் ஜாம்பவானான அமேசானின் வருவாயில் அதிரடியாக 5.7 பில்லியன் டாலர் குறைந்தது. இதேபோல் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தடாலடியாக பதிவிடுவது, வடகொரியாவை வம்பிழுப்பது என தினமும் ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப்.
 
இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பல வெளிப்படையான, சர்ச்சைக்குரிய ட்விட்டுகளால் கடும் விரக்தியடைந்த அமெரிக்காவின் முன்னாள் சி.ஐ.ஏ நிபுணராக இருந்த வில்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், “ட்விட்டர் நிறுவனம் ட்ரம்பின் வன்முறை, காழ்ப்புணர்ச்சி மிகுந்த பதிவுகளை பார்த்த பின்பும் அவரின் கணக்கை முடக்கவில்லை என்றால், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என பதிவிட்டுள்ளார். இவர் ஜார்ஜ் புஷ் அதிபராக இருக்கும்போது அமெரிக்க புலனாய்வுத்துறையின் ரகசிய பெண் உளவாளியாக இருந்தவர்.
 மேலும், இந்த ட்விட்டை #BuyTwitter (ட்விட்டரை வாங்கு ) மற்றும் #BanTrump (ட்ரம்பை தடை செய் ) எனும் ஹாஷ் டேக்குகளுடன் அவர் பதிவு செய்துள்ளார். வில்சனின் இந்த பதிவை தொடர்ந்து ட்ரம்பை விரும்பாத இணையவாசிகளும் இந்த ஹாஷ் டேக்குகளில் ட்விட் போட்டு அதை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் ட்விட்டரை விலைக்கு வாங்கி ட்ரம்பை வெளியேற்றுவதற்காக பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரமும் மேற்கொண்டுள்ளார் வில்சன். இந்த பிரச்சாரத்தின் மூலம் இதுவரை 6 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார். விரைவில் 100 கோடி ரூபாய் நிதி திரட்டி ட்விட்டரை விலைக்கு வாங்கி, ட்ரம்பின் ட்விட்டரை கணக்கை நீக்கவுள்ளதாகவும் பகீர் கிளப்பி வருகிறார் வில்சன்.