
இந்தியாவில் உள்ள ஆதார் தகவல்களை அமெரிக்காவில் உள்ள சி.ஐ.ஏ எனும் உளவு அமைப்பு சட்டவிரோதமாக ஆய்வு செய்ததாக விக்கிலீக்ஸ் தளம் தகவல் ஒன்றை வெளியிட்டது.
இந்தியாவில் ஆதார் விவரங்களைக் கொடுக்காமல் மறுக்க தனிமனிதர்களுக்கு அந்தரங்க ரீதியிலான உரிமை இருக்கிறதா இல்லையா என்கிற விவாதம் நடைபெற்று வரும் நிலையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்தத்தகவல் கடுமையான சர்ச்சைகளை எழுப்பியது.
இந்நிலையில், இந்த தகவலை ஆதார் விவர சேமிப்பு மையமான இந்தியாவின் தனிநபர் அடையாளங்களுக்கான அதிகார மையம் (யு.ஐ.ஏ.இ) மறுத்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் யு.ஐ.ஏ.இ அமைப்பு, ஆதார் தகவலுக்கான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்றும், அது விவரங்கள் கசியாமல் இருப்பதற்கான தற்காப்பு அமைப்புகளைக் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், திட்டமிட்டு இத்தகைய செய்திகள் பரப்ப்படுவதாகவும், ஆனால் அவற்றில் உண்மையில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.