செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

யாருக்கு செல்கின்றன நமது பெட்ரோல் காசுகள்? August 29, 2017

​யாருக்கு செல்கின்றன நமது பெட்ரோல் காசுகள்?



கடந்த 9 ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால், கச்சா எண்ணெயில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் இந்தியச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரமட்டுமே செய்திருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தது. அப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 8610 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 55.04 ரூபாய்.

அதே ஜூன் 28ம் தேதி 2017 அன்று கச்சா எண்ணெய் ஒரு பேரலின் விலை 3,026 ரூபாய் மட்டுமே. ஆனால், 2017 ஜூன் 28ம் தேதி மும்பைச் சந்தியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 78.44 ரூபாய். 
இன்றைய சூழ்நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதில் நாம் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம், இந்த காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ஒரே அளவில் மிகச்சிறிய மாற்றங்களுக்கு மட்டுமே உட்பட்டு அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை இரண்டு மடங்கு குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் விலை பாதியளவு உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 2010ம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோல் விலையையும், 2014ம் ஆண்டு அக்டோபர் முதல் டீசல் விலையையும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் நிறுவனங்களே மாற்றிக்கொள்ளலாம் என விதி தளர்த்தப்பட்டது. ஆனால், இதன் பிறகு மிக அதிகமாக வளர்ச்சி கண்டது தனியார் நிறுவனங்கள் தான்.

குறிப்பாக, கடந்த 2017 ஜூன் 16 முதல் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பிற்கு பிறகு கண் துடைப்பு  நடவடிக்கையாக முதல் 13 நாட்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை 3.45 குறைக்கப்பட்டது. அதன்பிறகாக மெல்ல விலை அதிகரிக்கப்பட்ட விலை கடந்த ஜூன் 28 முதல் இன்றுவரை சுமார் 5.63 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் இந்திய பெட்ரோலிய பொருட்கள் விநியோகத்துறையில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியன் ஆயில் 5%, பாரத் பெட்ரோலியம் 9%, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 7.4% அளவு விற்பனை குறைந்துள்ளது. இந்த மூன்று அரசு நிறுவனங்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்திய பெட்ரோலிய விற்பனைச் சந்தையில் சுமார் 95% சந்தையைக் கட்டுபடுத்தி வந்தன. தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு சுமார் 4% என்கிற அளவில் இருந்தது.

ஆனால், கடந்த ஓராண்டில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு சதவீதம் தடலாடியாக உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையில் 12% பெட்ரோலியப் பொருட்களை தனியார் நிறுவனங்கள் மட்டும் கட்டுப்படுத்த துவங்கியுள்ளன.

குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் 400 புதிய பெட்ரோல் பங்குகளையும், எஸ்ஸார் நிறுவனம் 1000 பெட்ரோல் பங்குகளையும் திறந்துள்ளது. உலகில் பெட்ரோலியத் தேவை உலக அளவில் 3% என்கிற அலவில் உயர்ந்துள்ள போது இந்தியாவில் அது 8%க்கும் அதிகமாக உள்ளது.

இவ்வளவு வேகமாக அதிகரிக்கும் பெட்ரோலியத் தேவை அரசின் கைகளை விட்டு தனியார் ஆதிக்கத்துக்கு சென்று வருகின்றன. தினம் தினம் விலையேற்றி வரும் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபம் பெருமளவுக்கு தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லத் துவங்கியுள்ளது.