சனி, 26 ஆகஸ்ட், 2017

‘​என் சாதி இருக்கும் தெருவில் நுழையாதே...’ நாமக்கல்லில் தொடரும் தீண்டாமை கொடுமை..!! August 26, 2017

‘​என் சாதி இருக்கும் தெருவில் நுழையாதே...’ நாமக்கல்லில் தொடரும் தீண்டாமை கொடுமை..!!


வேறு சமூகத்தினரின் தெருவில் இருச்சக்கர வாகனத்தில் சென்றதற்காக, தலித் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் புதன்சந்தை அருகே அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் தீரஜ்குமார். இவர் கடந்த 22-ம் தேதி மற்றொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தெரு வழியாக, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது. 

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நாகுல், பொம்மாயி ஆகியோர், தீரஜ்குமாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கைலப்பு ஏற்பட்டது. 

தீரஜ்குமார் வீடு திரும்பிய நிலையில், சுமார் 15 பேர் கொண்ட கும்பல், தீரஜ்குமாரின் வீட்டிற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டது. அந்த கும்பல் தீரஜ்குமார், அவரது தந்தை மணிவண்ணன், சகோதரர் இந்தர்ஜித், தங்கை திரிஷா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீட்டின் ஓடுகளை பிரித்து கற்களை வீசியதாக தெரிகிறது. 

காயமடைந்த தீரஜ்குமாரும், அவரது தந்தையும் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீரஜ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.