புதன், 30 ஆகஸ்ட், 2017

கனவை நனவாக்க 3 தலைமுறைகளாக காத்திருக்கும் வடகொரியா..! August 29, 2017

கனவை நனவாக்க 3 தலைமுறைகளாக காத்திருக்கும் வடகொரியா..!


வடகொரியா வீசிய ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டு வான் எல்லை வழியாகச் சென்று பசிபிக் கடலில் விழுந்துள்ளது. தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியாவின் ராணுவ நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்..

பல்வேறு அரசியல் கூறுகளாகப் பிரிந்து கிடந்த கொரிய தீபகற்பம், கடந்த 1948ம் ஆண்டு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகப் பிரிந்தது. இக்கால கட்டத்தில் இரண்டு கொரிய நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக்க இருதரப்பும் தனித்தனியே முயன்றதன் விளைவாக 1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வரை இருதரப்பும் போரில் ஈடுபட்டன. 

இதன் பின்னர் இருதரப்பும் போர் நிறுத்தம் தொடர்பாக தற்காலிக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தின. ஆனால், நிரந்தரப் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. அதனால், தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், இருநாடுகளுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராமல், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். 

இந்நிலையில், 1948ம் ஆண்டு வடகொரியாவை நிறுவிய கிம் டூ சங், தென்கொரியாவை எப்படியாவது வடகொரியாவுடன் இணைத்துவிடவேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருந்தார். 1994ம் ஆண்டு அவர் உயிரிழந்துவிட, அவருடைய மகன் கிம் ஜாங் இல் அதிபரானார். 2011ம் ஆண்டு இவரும் உயிரிழந்துவிட, அதன் பின் இவருடைய மகன் கிம் ஜோங் உன் தற்போதைய அதிபராகப் பதவிவகித்துவருகிறார். 

கிம் டூ சங்கின் கனவுகளை நிறைவேற்ற, அவருக்குப்பின் அவரது வாரிசுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையே, தென்கொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவது வடகொரியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

இருநாடுகளும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தவும் வடகொரியா தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்துவருகிறது. இருப்பினும், தென்கொரியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து உறவுகளை வளர்த்துவருவதே வடகொரியா பதற்றமேற்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்வதன் பின்னணியாக விளங்குகிறது