வெள்ளி, 19 நவம்பர், 2021

கத்தார் அரசின் மீது 7 ஆஸ்திரேலிய பெண்கள் நஷ்டஈடு வழக்கு தொடுக்க காரணம் என்ன?

 Australian women are suing Qatar : தோஹா சர்வதேச விமான நிலையத்தில் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்ட 7 ஆஸ்திரேலிய பெண்கள் கத்தார் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடுத்திருப்பதை அவர்களின் வழக்கறிஞர் செவ்வாய்க்கிழமை அன்று உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று நடைபெற்ற இந்த பரிசோதனையில், 7 பெண்களும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் செவிலியர்களால் ஆடைகளை அகற்றி சோதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் இது தொடர்பாக அனுமதியையும் கேட்கவில்லை. அதே போன்று எதற்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் கூறப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட 7 பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு ஆதரவின் பேரில் நடைபெற்ற தாக்குதல் இது என்று இந்த சம்பவம் குறித்து அப்பெண்கள் குறிப்பிட்ட பிறகு, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது கத்தார் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பின் கலிஃபா பின் அப்துலாஸிஸ் அல் தனி, பெண் பயணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடத்தப்பட்டதற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்நடவடிக்கை கத்தாரின் சட்டங்கள் அல்லது மதிப்புகளை பிரதிபலிக்கவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணை மேற்கொண்டது. மேலும் பெயர் குறிப்பிடப்படாத விமானநிலைய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த பெண்களின் வழக்கறிஞர் டாமியன் இந்த் நடவடிக்கைகள் போதுமானது அல்ல என்று வர்ணித்தார்.

இந்த பெண்களுக்கு ஏன் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது?

ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் புதிதாக பிறந்த குழந்தை குப்பைத் தொட்டி அருகே ப்ளாஸ்டிக் பையில் சுற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் 7 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறினார்கள்.

பல்வேறு விமானங்களில் இருந்து, 2 இங்கிலாந்து பெண்கள், 13 ஆஸ்திரேலிய பெண்கள் உட்பட 18 நபர்கள் வெளியேற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அனைத்து நபர்களுக்கும் ஆஸ்திரேலிய பெண்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகளை மேற்கொள்ளவில்லை.

ஆயுதம் ஏந்திய கத்தார் அதிகாரிகளால் விமானத்தில் இருந்து பெண்கள் இறக்கிவிடப்பட்டனர் மற்றும் அவர்கள் குழந்தையின் தாயா என்பதைத் தீர்மானிக்க விமான நிலைய டார்மாக்கில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் குழந்தைப்பேறு சோதனைகள் நடத்தப்பட்டது.

துப்பாக்கி வைத்திருந்த பல ஆண்களில் ஒருவரால் நான் கொல்லப்படப் போகிறேன், அல்லது விமானத்தில் இருந்த என் கணவர் கொல்லப்படப் போகிறார் என்று நான் உறுதியாக இருந்தேன் என தன்னுடைய வழக்கறிஞரிடம் பாதிப்பிற்கு ஆளான பெண் ஒருவர் கூறியதாக பி.பி.சி.யின் செய்தி அறிக்கை கூறுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கத்தார் அரசின் நடவடிக்கை எப்படி இருந்தது?

பரவலான சீற்றத்தைத் தொடர்ந்து, கத்தார் அரசாங்கம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டது மற்றும் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக கூறியது. புதிதாக பிறந்த பெண் குழந்தையை ப்ளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு குப்பைத்தொட்டியின் அடியே வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள விமானங்களிலும் குழந்தையின் பெற்றோரை தீவிரப்படுத்தும் நிலை ஏற்பட்டது என்று அந்த அரசு கூறியது.

அவசரமாக சோதனை நடத்தியது கொடூரமான குற்றத்தை செய்த குற்றவாளிகள் தப்பிக்கூடாது என்று தான். இந்த நடவடிக்கையால் பயணிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான மீறல்களுக்கு கத்தார் அரசு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது. உலக நாடுகள் மத்தியில் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்தைப் பெற்றது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பயங்கரமானது மற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும் கூறியுள்ளனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக விரிவான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு அழைப்புவிடுத்தது. குற்றவியல் வழக்கைத் தொடர்ந்து, விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணை முடிவுகள் என்ன ஆனது என்று வெளியிடப்படவில்லை என்று பெண்களின் வழக்கறிஞர் கூறினார் என சி.என்.என். செய்தி நிறுவனத்தின் செய்தி குறிப்பிடுகிறது.

கத்தாருக்கு எதிராக இப்போது வழக்கு தொடுக்க காரணம் என்ன?

பாதிப்பிற்கு ஆளான பெண்கள் அனைவரும் 30 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்த சம்பவத்த்ற்கு பிறகு அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறியுள்ளனர். சில பெண்கள் பறக்கும் பயத்தை வளர்த்துக் கொண்டனர், வேலையில் இருந்து ஓய்வு எடுத்து உளவியல் ஆலோசனையைப் பெற வேண்டியிருந்தது என்று அந்த பெண்களின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கத்தார் அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்த பெண்கள், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பெண்கள் நஷ்டஈடு கோருகின்றனர், சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் அடுத்த சில வாரங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.

இது போன்ற பரிசோதனைகளை நடத்த சட்டப்பூர்வமாக அனுமதி உண்டா?

விமான நிலைய சோதனைகளை பொறுத்தவரை உலகளாவிய சட்டங்கள் ஏதும் இல்லை. மிகவும் தீவிரமான சோதனை – குறிப்பாக பாதுகாப்பு பணியாளர்கள் உடல் சோதனைகள் மேற்கொள்ளும் போது பெரும்பாலும் சட்டப்பூர்வ அதிகாரம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்த சம்பவம் நடந்திருந்தால் அது தாக்குதலுக்கு சமமானதாக இருந்திருக்கும். வட அமெரிக்காவில் எதிர்பாலினர் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தால் இது போன்ற சிவில் வழக்குகள் வெற்றி பெற்றிருக்கும்.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அன்று நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் 2977 அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட பிறகு, விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது மற்றும் தனியுரிமையைக் குறைத்தது. இதற்கு முன், பாதுகாப்பு திரையிடல் இருந்தது. ஆனால் அது மிகவும் குறைவான சோதனைகளையே கொண்டிருந்தது.

இந்த தாக்குதல்கள் நடைபெற்று முடிந்த சில மாதங்கள் கழித்து, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தை உருவாக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார். முன்பு விமான நிலையப் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருந்த தனியார் நிறுவனங்களுக்குப் பதிலாக ஃபெடரல் விமான நிலையத் திரையிடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அனைத்து சரிபார்க்கப்பட்ட பைகளும் திரையிடப்பட வேண்டும், காக்பிட் கதவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும், மேலும் ஃபெடரல் ஏர் மார்ஷல்களை விமானங்களில் வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டதாக ஏ.பி. அறிவித்தது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள சட்டங்களின் படி, உடல் சோதனை என்பது இறுதி கட்டம் மட்டுமே. போதைப்பொருள் அல்லது சட்டவிரோத ஆயுதம் போன்ற சட்டத்திற்குப் புறம்பாக ஏதாவது உள்ளது என்ற ‘நியாயமான சந்தேகத்தின்’ அடிப்படையில் பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகள் மீது சோதனைகள் நடத்தமுடியும். ஆனால் சந்தேகத்திற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

source https://tamil.indianexpress.com/explained/why-a-group-of-australian-women-are-suing-qatar-for-a-2020-strip-searched-at-doha-airport-370884/