வியாழன், 25 நவம்பர், 2021

அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

 24 11 2021 வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில், சட்டமன்ற தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், வெற்றி பெறுவதற்கு அதிமுக முனைப்புடன் உள்ளது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காக இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும். 11 பேர் எண்ணிக்கை கொண்ட குழுவை 18 ஆக அதிகரிக்க வேண்டும். வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அடுத்தப்படியாக, அதிமுகவை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் வலியுறுத்தினார். கூட்டத்தில் சிலர்  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை குழு தலைவராகவோ, அவைத்தலைவராகவே நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/admk-district-secretaries-meeting-details-373822/