புதன், 24 நவம்பர், 2021

ஜெயலலிதா மரண வழக்கு; சிகிச்சை குறித்த உண்மை வெளிவர விருப்பம் – தமிழக அரசு

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தீவிரமாகவும், உண்மையாகவும் விசாரிக்க புதிய அரசு விரும்புகிறது என்றும், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய அப்பலோ மருத்துவமனை மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று, கடைசியில் மரணம் அடைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சந்தேகத்திற்கு இடமின்றி மிக உயரிய தலைவர்களில் ஒருவர்” என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கூறியது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஜெயலலிதாவின் மரணத்தை தீவிரமாகவும், உண்மையாகவும் விசாரிக்க புதிய அரசு விரும்புகிறது என்றார்.

“ஜெயலலிதாவின் மரணத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தும்” தொடர் நிகழ்வுகளை விவரித்த தவே, கோடநாடு எஸ்டேட் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். மற்றொரு நபரின் மனைவி மற்றும் மகள் கொல்லப்பட்டனர். எஸ்டேட் கணினியை நிர்வகிக்கும் மூன்றாவது நபர் இறந்தார். இவை அனைத்தும் அவரது மரணத்தின் தீவிரத்தை காட்டுகிறது” என்று தவே கூறினார். மேலும், இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் திரிபுபடுத்துவதாக கூறினார். மக்களிடம் உண்மை நிறுவப்பட வேண்டும். வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகளை மாநில காவல்துறை விசாரித்து வருகிறது. உண்மைகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழலை ஏற்படுத்த உயர் அதிகாரம் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும், என்று வாதிட்டார்.

அப்பல்லோ நிர்வாகம் ஒரு வருடம், விசாரணையில் கலந்து கொண்ட நிலையில், இப்போது விசாரணை பாரபட்சமானது என்று கூறுகிறார்கள். விட்டுக்கொடுப்பு கோட்பாடு இங்கே பொருந்தும், என்று தவே வாதிட்டார்.

ஆணையம் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். அதை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை அரசு தீர்மானிக்கும் என்றும் தவே கூறினார்.

இந்த விஷயத்தில் நடவடிக்கை தேவை என்று அரசாங்கம் முடிவு செய்யும் வரை, எதுவும் நடக்காது. நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, அப்பல்லோ நிர்வாகம் ஆட்சேபிக்க முடியும். ஆணையத்தின்  நடைமுறைகள் விரும்பதகாதவாறு இருக்கலாம், அதனை எதிர்கால முடிவுகளுக்கு விட்டுவிட வேண்டும். நீதிமன்றம் இப்போது தலையிட முடியாது. பொது நலனுக்கான அதன் விசாரணையை முடிக்க ஆணையத்தை அனுமதிக்கவும்,” என்று திரு. தவே வாதிட்டார்.

பின்னர் விசாரணையில், கமிஷன் அறிக்கையுடன், அரசின் நடவடிக்கை அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்கப்படும் என்று ரஞ்சித் குமார் கூறினார்.

“‘நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்பது கடந்த காலத்தில் உள்ளது. கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் என்ன செய்வது?” என்று பெஞ்ச் கேட்டது.

கடந்த காலத்தில் கமிஷன்களின் அறிக்கைகளைக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடப்பட்டுள்ளன என்று ரஞ்சித்குமார் குறிப்பிட்டார்.

நீதிபதி நசீர், “நேரம் கடந்து.. சூழ்நிலையைத் தணிப்பதற்காக” கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

“கமிஷன்களின் அறிக்கைகளை வெளிப்படுத்த நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் ஏன் கமிஷன்களை நியமிக்கிறீர்கள். சூழ்நிலையைத் தணிப்பதற்காகவா?” என நீதிபதி நசீர் கேள்வி எழுப்பினார்.

“கமிஷன்கள் அமைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. 1984 கலவரம் தொடர்பான நீதிபதி நானாவதி கமிஷன் அறிக்கை எவ்வாறு வழக்குத் தொடர வழிவகுத்தது என்பதை ரஞ்சித்குமார் குறிப்பிட்டார்.

விசாரணை பொதுவில் நடக்கிறதா அல்லது கேமராவில் பதியப்படுகிறதா என்பதை தெளிவுபடுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு ஆணையத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

விசாரணையின் போது, ​​ஆணையத்தை மாற்றி அமைக்க முடியுமா என்று நீதிமன்றம் கேட்டது. இதற்கு, தவே, உச்ச நீதிமன்றத்தின் முன்னுதாரணங்களைக் குறிப்பிட்டு அது ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்த பிறகு, அதன் செயல்பாட்டில் தலையிடவோ அல்லது அதன் அதிகாரங்களைப் பறிக்கவோ முடியாது. ஆணையம் வெறும் “உண்மையைக் கண்டறியும் அமைப்பு”. அதன் அறிக்கை முற்றிலும் பரிந்துரைக்கும் இயல்புடையதாக இருக்கும். “எவருக்கும் எந்தவித பாரபட்சமும் ஏற்படாது,” என்று குறிப்பிட்டார்.

“அம்மா கூடக் கேட்காமல் உணவு தரமாட்டார்”, ஆனால் அப்பல்லோ நிர்வாகம் கேட்காமல் நீதிமன்றம் ஏன் இந்த விசாரணைக்குள் வந்தது என்று மீண்டும் தவே கேட்டார்.

ஆணையத்தை நியமித்த அரசின் அறிவிப்பு செல்லுபடியாகும். ஜெயலலிதா சிகிச்சையின் நோக்கம் மற்றும் அவரது பதிவுகளை ஆய்வு செய்து ஆணையம் தனது அதிகார வரம்பிற்குள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சிறந்ததா என்பதை ஆணையம் ஆராயலாம். மரணம் மற்றும் இறந்த விதம் முக்கியம். சிகிச்சையின் தன்மை போதுமானதா என்று ஆய்வு செய்ய வேண்டும், என்று தவே. கூறினார்.

மருத்துவமனையின் நற்பெயர், ஆணையத்தால் “ஒரே இரவில் சிதைக்கப்பட்டது” என்று மருத்துவமனையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதிட்டார்.

37 ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மருத்துவ அறிக்கைகளைக் கூட இந்த ஆணையம் கேட்கும் என்று ஆர்யமா சுந்தரம் வாதிட்டார்.

விசாரணை ஆணையத்தின் செயல்பாடு பாரபட்சமாக உள்ளது என்ற அப்பல்லோ மருத்துவமனையின் மனுவின் அடிப்படையில், ஆணையத்தின் நடவடிக்கைகள் ஏப்ரல் 2019 இல் உச்ச நீதிமன்றத்தால் இடை நிறுத்தப்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-govt-says-jayalalitha-treatment-details-should-be-probed-373466/