புதன், 17 நவம்பர், 2021

சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும்; ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி

 சமூக ஊடகங்களை “அராஜகம்” என்று குறிப்பிட்டு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எஸ்.குருமூர்த்தி செவ்வாயன்று அதை தடை செய்வதற்கான விருப்பத்தை ஆராய வேண்டியதன் அவசியத்தை வாதிட்டார். தேசிய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குருமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய குருமூர்த்தி, சமூக ஊடகங்கள் “ஒழுங்கான சமூகத்தின்” பாதையில் தடையாக இருப்பதாக கூறினார். இந்திய அரசியலமைப்பு கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுன்சிலின் மூத்த உறுப்பினர்கள் சிலர் அவரது பரிந்துரைகளை எதிர்த்தனர்.

சீனா சமூக ஊடகங்களை “அழித்துவிட்டது” என்று கூறிய, குருமூர்த்தி இந்திய உச்ச நீதிமன்றம் கூட சமூக ஊடகங்களின் பங்கு குறித்து கவலை தெரிவித்தது என்றார். “நாம் அவைகளை (சமூக ஊடக தளங்கள்) தடை செய்ய வேண்டும். ஃபேஸ்புக் இல்லாமல் நம்மால் இருக்கமுடியாதா? என்று கேள்வி எழுப்பிய, தமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் எடிட்டரான குருமூர்த்தி, மியான்மர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் அமைதியின்மையைத் தூண்டுவதில் சமூக ஊடகங்களின் பங்கைச் சுட்டிக்காட்டினார்.

பின்னர், ஒரு கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, “தடை” என்பது கடினமாகத் தோன்றினாலும், “அராஜகம் தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறினார். ‘ஊடகங்களுக்கு அஞ்சாதவர்’ என்ற தலைப்பில் பேசிய குருமூர்த்தி, சமூக ஊடக தளங்களின் பங்கு பற்றிய முழுமையான ஆவணங்களை சேகரிக்குமாறு சபையை வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களின் நேர்மறையான அம்சங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி “நீங்கள் அராஜகத்தை (சமூக ஊடகங்களை) புகழ்ந்து பேசலாம்… புரட்சிகள் மற்றும் வெகுஜன கொலைகளிலும் சில நன்மைகள் உள்ளன. ஆனால், தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு ஒழுங்கான சமுதாயத்தை நீங்கள் உருவாக்குவது அந்த வழியில் அல்ல,” என்று கூறினார்.

குருமூர்த்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்ற உறுப்பினர்களில் ஜெய்சங்கர் குப்தா மற்றும் குர்பீர் சிங் ஆகியோர் அடங்குவர். “ஒவ்வொரு சகாப்தமும் அதன் சொந்த வடிவத்தை உருவாக்குகிறது. இது (சமூக ஊடகம்) பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டுள்ளது. சமூக ஊடகங்கள் பல வழிகளில் ஒரு படி மேலே உள்ளது… நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், அதை விலக்க முடியாது என்று குர்பீர் சிங் கூறினார்.

திரிபுராவில் பத்திரிக்கையாளர்கள் கைது, பெகாசஸ் ஸ்பைவேரை அரசு அமைப்புகள் பயன்படுத்தியது, ரஃபேல் போர் விமானம் வாங்கும் விவகாரம் போன்ற விஷயங்களில் குருமூர்த்தியின் மௌனம் குறித்து சுக்லா கேள்வி எழுப்பினார். மேலும், “சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தால் பத்திரிகை சுதந்திரத்திற்கு என்ன நடக்கும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த குருமூர்த்தி, அதிகார துஷ்பிரயோகத்தை நீதித்துறை கட்டுப்படுத்துகிறதா என்பதுதான் இறுதியில் முக்கியமானது என்றார். “உச்சநீதிமன்றம் பெகாசஸைக் கையாளுகிறது, உங்கள் பிரச்சனை என்ன? போஃபர்ஸ் விவகாரத்தில், அரசு அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய முயற்சிக்கிறது,” என்றார்.

பள்ளிகளில் திருநங்கை குழந்தைகளைச் சேர்ப்பது தொடர்பான என்சிஇஆர்டியின் கையேடு “குழந்தைகளின் மனதில் குழப்பத்தை உருவாக்கும்” என்றும் குருமூர்த்தி விமர்சித்தார்.

source https://tamil.indianexpress.com/india/social-media-is-anarchic-need-to-ban-it-rss-ideologue-gurumurthy-370403/