ஞாயிறு, 28 நவம்பர், 2021

தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஐடி துறை முக்கிய பங்கு வகிக்கும்: மு.க.ஸ்டாலின்!

 27 11 2021 தமிழகத்தை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலராக உயர ஐடி துறை முக்கியப் பங்காற்றும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாக உள்ளவற்றை தொழில் துறையுடன் இணைந்து அரசு அகற்றும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.

சென்னையில் சிஐஐ மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன்ஸ் (எல்காட்) ஏற்பாடு செய்த 20வது’கனெக்ட் 2021’ கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராகக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் பார்வையில் தகவல் தொழில்நுட்பம் பங்கு வகிக்கும் என்று கூறினார்.

மே மாதம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் லட்சியத் திட்டத்தை வகுத்துள்ளது.

இது ஒரு தகவல் தொழில்நுட்ப சகாப்தம் என்று கூறிய ஸ்டாலின், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை இன்று வந்துள்ளது என்றார்.

ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திலும், பெரிய முதலீடுகளைக் கொண்டு வருவதிலும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாநாடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/it-sector-to-play-a-major-role-in-making-tn-usd-1-trillion-economy-said-mk-stalin/