வியாழன், 18 நவம்பர், 2021

அதி கனமழை எச்சரிக்கை – சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 18 11 2021 

அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவை பெற்று வருகின்றன. இதேப்போல் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களும் அதிக அளவு மழையை பெற்று வருகின்றன. வங்கக்கடலில் கடந்த 13 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெதுவாக நகர்ந்து வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது.

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.   

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, வேலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/heavy-rain-alert-school-colleges-holidays-on-these-districts-370788/