திங்கள், 22 நவம்பர், 2021

ஆடு திருடர்களை விரட்டி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை21 11 2021

 திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த 56 வயதான பூமிநாதன் (வயது 56), நேற்று இரவு ரோந்து பணியின்போது நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றிருக்கின்றனர்.

தப்பித்துச் சென்றவர்கள் ஆடுகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்து கொண்ட பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்றுள்ளார். திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகே அந்த திருட்டு கும்பல் சென்ற போது, ஓரு டூவீலரை தடுத்து நிறுத்தி அதில் வந்த 2 திருடர்களைப் பிடித்துள்ளார் பூமிநாதன்.

இதைப் பார்த்த மற்ற 2 டூவீலர்களில் வந்த நபர்கள், பூமிநாதனை அணுகிப் பிடிபட்ட இருவரையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், பூமிநாதன் விட முடியாது என்று கூறியதும் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளல் சப் இன்ஸ்பெக்டரை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

பூமிநாதனை வெட்டிவிட்டு திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில் தான் அந்த வழியாகச் சென்றவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தகவலறிந்த உயரதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், உடனடியாக 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து திருட்டு, கொலைக்கார கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். ஆடுதிருடர்களை பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/goat-thieves-chased-murdered-sub-inspector-near-trichy-tamil-news-372143/