வெள்ளி, 26 நவம்பர், 2021

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இந்தியாவில் ஏன் இல்லை? மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

26 11 2021  கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கான முடிவானது பொருளாதார அடிப்படையில் இருக்க கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் அறிவிக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளது.

குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பூஸ்டர் தடுப்பூசிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் ஊக்குவித்து வரும் போது இந்தியாவில் ஏன் இது செயல்பாட்டில் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். பூஸ்டர் டோஸ் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்று கருதினால் அதனை வழங்குவதற்கான காலவரிசையை சமர்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் விபின் சங்கானி மற்றும் ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு, பூஸ்டர்களின் தேவை மற்றும் செயல்திறன் குறித்த முரண்பட்ட ஊடக அறிக்கைகள் மற்றும் மருத்துவக் கருத்துகளை சுட்டிக்காட்டியது. இந்த ஷாட்களை நிர்வகிப்பதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் இதுவரை இல்லை என்று இந்தியாவில் உள்ள நிபுணர்கள் கருதுகின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இது ஒரு விலையுயர்ந்த முன்மொழிவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முடிவானது பொருளாதாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது. அரசாங்கம் இதனை இலவசமாக வழங்குகிறது. பலரும் தடுப்பூசிகளுக்கு பணம் செலுத்துவதில்லை. இது கூட தற்போதைய நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்க வேண்டாம் என்று நினைக்க காரணமாக இருக்கலாம். ஆனால் கன்செர்வேட்டிவ் முறையில் நாம் இறங்க வேண்டாம். மேலும் இரண்டாம் அலையின் போது நம் நாடு இருந்ததைப் போன்ற சூழல் தற்போது வேண்டாம். ஆனாலும் பூஸ்டர் தடுப்பூசி இல்லை என்றால் நாம் இந்த தடுப்பூசியின் நன்மைகளை இழக்க நேரிடும் என்று டெல்லியின் கொரோனா தொற்று நிலைமையை கண்காணித்து வரும் ஒரு செயல்பாட்டில் விசாரணையின் போது அமர்வு அறிவித்தது.

பலர், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு பூஸ்டர் தேவைப்படுமா, எப்போது அனுமதிக்கப்படும் என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர் என்று நீதிமன்றம் கூறியது. அதிக அளவில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. அவை இன்னும் சில நாட்களில் காலாவதியாகலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த விவாதம் குறித்தும் நீதிமன்றம் மேற்கோள்காட்டியது. அதில் மற்றொரு அம்சம் 18 வயதிற்குட்பட்ட தடுப்பூசிகளைப் பற்றியது என்று குறிப்பிட்டது.

பல வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவிட்டன. இந்தியா முழுவதும் பள்ளி செல்லும் மாணவர்கள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்புவதால் குழந்தைகள் மத்தியில் புதிய நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதற்கு முன்னதாக விசாரணையில், பூஸ்டர்கள் நிர்வகிக்கப்படாவிட்டால் நாடு மற்றொரு தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று மருத்துவ சமூகத்தின் ஒரு பிரிவினர் வெளிப்படுத்திய கவலைகளை நீதிபதி சங்கி குறிப்பிட்டார். மேற்கத்திய உலகம் பூஸ்டர்களை ஊக்குவிக்கிறது, பூஸ்டர்களைப் பெறுகிறது, மேலும் தானாக முன்வந்து அதை எடுக்க விரும்புபவர்களை கூட நாம் அனுமதிக்கவில்லை என்று கவலையை வெளிப்படுத்தினார் நீதிபதி.

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் தற்போது பூஸ்டர் தடுப்பூசிகள் தேவையில்லை என்றும் மூன்றாம் அலைக்கான சாத்தியங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்து வருகின்றது என்றும் கூறினார். குலேரியாவின் அறிக்கையையும் நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று சுட்டிக்காட்டியது.

source https://tamil.indianexpress.com/india/why-no-to-covid-booster-shot-delhi-high-court-asks-centre-374569/