வியாழன், 25 நவம்பர், 2021

ஜெ.வின் வேதா இல்லம் அரசுடமை ரத்து; தீபக்- தீபாவிடம் ஒப்படைக்க உத்தரவு: சென்னை ஐகோர்ட்

 Tamilnadu Vedha Illam Case Update : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், 3 வாரங்களுக்குள் இந்த இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசியல் தொடர்பாக அனைத்து சந்திப்புகள் மற்றும் தனது அரசுப்பணிகளை இந்த இல்லத்தில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதன்பிறகுஅவரது நினைவாக சென்னை மெரினாவில் பீனிக்ஸ் பறவையின் வடிவமைப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

மேலும் அவர் வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு ஜெயலலிதாவின் நினைவிடமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படுவதாக கடந்த அதிமுக அரசு சட்டம் இயற்றியது. அதனைத் தொடர்ந்து வேதா இல்லம் நினைவிடமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இந்த இல்லம் நினைவிடமாக திறக்கப்பட்டது.

ஆனால் அதிமுக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் இருவரும் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை. எனவே வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், இந்த வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லாமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஜெயலலிதாவின் வாரிசுகளான எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல், நிலம் கையகப்படுத்தப்பட்டதையும், வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதும் தவறு என்று தீபா மற்றும் தீபக் இருவரும் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட சட்டம் செல்லாது என்றும், இன்னும் 3 வாரங்களில் வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக் இருவரிமும் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கும்போது 2-வது நினைவிடம் எதற்கு என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய 67.95 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-former-cm-jayalalitha-vedha-illam-case-update-in-tamil-373736/