புதன், 14 ஜூன், 2023

அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி கைது குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து!

 14 6 23

அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும்  நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அவரின் இல்லம், தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. நேற்று இரவும் சோதனை தொடர்ந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தொலைபேசி வழியாக பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “புயல்வேகத்தில் கடமையாற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி. திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு நடு இரவில் கைது செய்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளனர். அதிகாரத்தில் திமிரில் அடாவடிதனத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக அரசு.

அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்ட அமலாக்கத்துறையையும், சிபிஐயை ஏவி விடுவது மோடி அரசு வழக்கமாக கையாளும் முறை. தலைமை செயலாளர் அனுமதி பெறாமல் நேற்று கோட்டைக்குள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். எந்த விசாரணையும் சந்திக்க தயார் என்று சொன்ன அமைச்சரை துணிச்சலாக இருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் கைது செய்துள்ளனர்” என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

“எத்தனையோ வழக்குகளை வாய்ப்பூட்டு சட்டங்களை  சந்தித்த திமுக இதனை நிச்சயம் எதிர் கொள்ளும். ஒரு வட்டாரத்தில் அறியப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தேசிய அளவில் பேசப்படும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். செந்தில் பாலாஜியை சித்ரவதை செய்வதன் மூலம் திமுகவை  வீழ்த்த முடியாது என்பதை ஒன்றிய அரசிற்கு தெரியபடுத்துகிறேன். அமைச்சரை கைது செய்வதற்கு முன் சட்டப்பேரவை தலைவரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், மரபுகளை மீறியுள்ளனர். திமுகவை காயப்படுத்த முடியுமா என்பதை யோசிக்கின்றனர், அது அவர்களை முட்டுசந்தில் கொண்டு வந்து விடும்” எனவும் நாஞ்சில் சம்பத் கூறினார்.

source https://news7tamil.live/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0.html