வெள்ளி, 10 ஜூன், 2016

‘வியாபம் ஊழல் வழக்கு: உளவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டாரா? .................


இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை எல்லாம் பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழலுக்கு நிகராகாது.
ம.பி. பி.ஜே.பி. ஆட்சியில் பணம் இருந்தால் எந்தப் பதவியையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம். கடை களில் கத்திரிக்காய், வெண்டைக்காய் வாங்குவது போலத்தான்.
ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பெரிய புள்ளியின் மகனுக்கு, மத்திய பிரதேச பி.ஜே.பி. அரசியல்வாதியின் தலையீட்டால் உடனடியாக உயர்கல்விக்கான தேர்ச்சிக் கான சான்றிதழ், மதிப்பெண் பட்டியலுடன் தயாராக வந்து நிற்கிறது. அதற்குப் பிறகு ஒரு காலத்தில் ஆறாம் வகுப்புப் படித்தவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. 15 ஆண்டுகாலமாக இந்தத் தெருப்புழுதிக் கூத்து ‘கோலாகலமாக’ நடந்துகொண்டு வந்திருக்கிறது.
ஆண்டு ஒன்றுக்கு 2000 மருத்துவர்கள் வெளியேறு கிறார்கள் அங்கு. தகுதி திறமை பேசும் பார்ப்பன ஊடகங்கள் பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தில் அரைகுறைப் படிப்பாளிகளுக்கெல்லாம் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் வாரி இறைக்கப்படுகின்றனவே - அதைப்பற்றியெல்லாம் எழுதிட பேனா முனை வேலை நிறுத்தம் செய்கிறதே!
இந்த அபாயகரமான ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்தவுடன்தான் - பல திடுக்கிடும் தகவல்கள் - கொலைகள் - தற்கொலைகள் கொத்துக் கொத்தாக வெளியே வந்து விழ ஆரம்பித்துவிட்டன.
ஆளுநர் மகன் கூடத் தப்பவில்லை; தற்கொலை செய்துகொண்டான்.
நேற்றுமுதல் நாள் ஒரு நிகழ்வு:
இந்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி, அஜய்குமார், இவர் வியாபம் ஊழல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் முக்கிய நபராவார். இந்த வழக்கின் விசாரணையின் போது பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய பல்வேறு முக்கிய ஆதா ரங்களை சேகரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று முதல் நாள் இரவு அஜய் குமார், போபாலில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது அதி வேகத்தில் வந்த கருப்பு நிற கார் ஒன்று அவரை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அஜய்குமார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தியவர்கள்மீது பொதுமக்கள் வழக்குப் பதிவு செய்யக்கோரி பல மணிநேரமாக போரா டியதற்குப் பிறகே காவல்துறையினர் வழக்கு பதிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும், இது விபத்தா? கொலையா? என்பது பற்றி அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்கப் படும் என்றும் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (வியாபம்) கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மட்டத்தில் ஊழல் நடந்து வந்துள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவரது மனைவி மற்றும் மாநில ஆளுநர் உள்பட மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் இந்த ஊழலில் பங்கெடுத்துள்ளனர். இவ்வூழல் தொடர்பாக மாநில அரசு அமைத்த கண் துடைப்பு விசாரணைக் குழுவை ரத்து செய்து, மத்திய புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைத்து, விசாரணை உச்சநீதிமன்ற கண்காணிப்பின்கீழ் நடைபெற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணை யிட்டதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் இந்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரி அஜய் குமார் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் அவர்மீது காரை மோதி கொலை செய்துவிட்டுத் தப்பியோடி விட்டனர்.
இந்த மரணத்தை அடுத்து வியாபம் ஊழலில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 அய் தாண்டி விட்டது. இதில் அய்யத்திற்கிடமான முறையில் மரண மடைந்தவர்களின் எண்ணிக்கை 120 அய் தாண்டும்.
இந்த வியாபம் ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச ஆளுநரின் மகன் உட்பட இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
தற்பொழுது உயிரிழந்துள்ள அஜய் குமார் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறக் கூடியவர். இவருக்கு இந்திய காவல்துறை பதக்கம் வழங்கப்பட இருந்தது.
மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்ற வாளியைக் கண்டுபிடித்த ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்படவில்லையா?
அதேபோன்றதுதான் இந்த உளவுத் துறை அதிகாரியின் மர்ம மரணமும்.
தோண்டத் தோண்ட வியாபம் ஊழலில் இன்னும் எத்தனை எத்தனை எலும்புக் கூடுகள், கபால ஓடுகள், நச்சுக் குப்பிகள், துப்பாக்கி ரவைகள் வந்து கொண்டு இருக்குமோ - யார் கண்டது?
ஊழலற்ற ஆட்சியை நடத்துவதாக நாடெங்கும் தம்பட்டம் அடிக்கும் பி.ஜே.பி. குழுமம் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லும்?
வியாபம் ஊழல் பெரிய சாம்ராஜ்ஜியத்தில் வியாபித்துப் பரந்து கிடக்கிறது. உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரணை நடந்துகொண்டுள்ள நேரத்தில், முக்கியமான உளவுத் துறை அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள சாலை விபத்தில், சதி இருக்கும் என்று பேசப்படுகிறது.

Related Posts: