புதன், 29 ஜூன், 2016

மூக்கடைப்பை சரிசெய்யும் கற்பூரவல்லி !!!


கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்றவை வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். நுரையீரல் தொற்று குறையும். தொண்டை கட்டு, கரகரப்புகான மருந்து தயாரிக்கலாம். மிளகுப்பொடி, ஜாதிகாய் பொடி, தேன். சிறிது ஜாதிக்காய் பொடி, 2 சிட்டிகை மிளகுப் பொடி, இதனுடன் தேன் விட்டு கலந்து சாப்பிடும்போது தொண்டை கட்டு சரியாகும்.
காலை, மாலை சாப்பிட்டுவர இருமல், சளி இல்லாமல் போகும். உடல் சமநிலையை பெறுகிறது. சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி, ஜாதிக்காய் பொடி, சுக்குப் பொடி. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு சிறிது துளசி இலைகள், சிறிது சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்துவர சளி, இருமல் குணமாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது.
இதை பெரியவர்கள் 100 மில்லி அளவுக்கு எடுக்கலாம். இந்த மருந்தால் மூக்கடைப்பு விலகி போகிறது. நெஞ்சு சளி, உடல் வலி, காய்ச்சல் சரியாகிறது. ஜீரண கோளாறுகளுக்கு துளசி மருந்தாகிறது. ஜாதிக்காய் வயிற்று புண், செரிமானத்துக்கு மருந்தாகிறது. சளி, தொண்டை கட்டு பிரச்னையை போக்குகிறது. சுவாச பாதையை சீர்செய்கிறது. நெஞ்சக சளிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தூதுவளை, ஆடாதோடை இலைப் பொடி, திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். இதில் தூதுவளை இலையை போடவும். அரை ஸ்பூன் ஆடா தோடை இலைப் பொடி, கால் ஸ்பூன் திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி கரையும். தொண்டை வலி சரியாகும். சுவாசபாதையில் ஏற்படும் தொற்று குணமாகும்.
-