செவ்வாய், 12 ஜனவரி, 2021

தன்னார்வலர்களை களமிறக்கும் விவசாயிகள்: ஜன 26-ல் மெகா போராட்டம்

 டெல்லியில் வேளாண் மசோதாவை எதிர்த்து  40 நாட்களுக்கு மேலாக   விவசாயிகள்  போராட்டம் நடத்தி  வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாபிலிருந்து டிராக்டர்கள் மூலம் ஊர்வலமாக சில விவசாயிகள் சென்று கொண்டிருந்தனர். தற்போது இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிராக்டர்கள் மூலமாகவே  ஊர்வலம் சென்று,  குடியரசு  தினத்தன்று தலைநகரை முற்றுகையிட உள்ளனர்.

இதுபற்றி பஞ்சாபின் கீர்த்தி கிசான் சங்கத்தின் துணைத் தலைவர் ராஜீந்தர் சிங் கூறியதாவது:
“நாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் இயக்கத்தைத் தொடங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கள் இயக்கம் நன்கு கட்டமைக்கப்பட்ட இயக்கமாக செயல்படுகின்றது. குடியரசு தினத்தன்று சிங்குக்குச் செல்லும் தன்னார்வலர்களின் விவரங்களையும் குறிப்பிட போவதில்லை.  அதோடு பஞ்சாபில் இருந்து லட்சக்கணக்கான தன்னார்வலர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

சன்யுக்ட் கிசான் மோர்ச்சா என்னுமிடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு பின் தான்,  தன்னார்வலர்கள்  எந்தெந்த இடங்களுக்கு டிராக்டர்கள் மூலம் செல்லுவார்கள் என்று முடிவு செய்யப்படும் என கூறப்படுகின்றது

“குறைந்தது 1 லட்சம் டிராக்டர்கள்  எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அது எங்களை பொறுத்தவரை குறைந்தபட்சமே ஆகும். நிறைய விவசாயிகள் சேர்ந்த வண்ணம் உள்ளதால் எண்கள் இன்னும் அதிகமாக இருக்கும்.  குடியரசு தினத்தன்று முற்றுகையிடுவதற்கான திட்டங்களை முடிவு செய்துள்ளோம்.  புதியதாக  சேரும் ஆட்களின் தரவுகளையும் சேகரித்து வருகின்றோம்” என்கிறார்  நியூசிலாந்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜதிந்தர் சிங் பால்.  இவர் போராட்டம்  தொடங்கியதிலிருந்து பாதுகாப்பு குழுவில் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார்.

கிசான் கீர்த்தி யூனியனின் இயக்கத்தில்  முதல் நாளில் மட்டும் சுமார்  3,500 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக  குழுவில் சேர்ந்தனர். இவர்களில் பெரும்பாலோனோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள். அதோடு மகர சங்கராந்தி மற்றும் லோஹ்ரி போன்ற இயக்கங்களை விட இந்த இயக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. கடந்த வாரம், போராட்டத்தின் முன்னோட்டமாக டிராக்டர் ஒன்று கிழக்கு மற்றும் மேற்கு புறம் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் அணிவகுப்பை மேற்கொண்டது.

இந்த வார நிகழ்வுகள்:

“லோஹ்ரி திருவிழாவை முன்னிட்டு  ஜனவரி 13 ம் தேதி வேளாண் மசோதாக்களின் நகல்களை எரிக்க  விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்பதால் (ஜனவரி 18 ம் தேதி) மஹிலா கிசான் திவாஸ் தினத்தன்று பெண்களும்  தங்களின் பங்களிப்பை வழங்குவார்கள்.  ஜனவரி 20 அன்று குரு கோபிந்த் சிங்கின் பிரகாஷ் பர்வின் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என சத்தியம் செய்யப்படவுள்ளது” என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நவநிர்மன் கிசான் சங்கதன் என்ற அமைப்பு ‘டெல்லி சாலோ யாத்திரை’ எனும் முழக்கத்தோடு புவனேஸ்வரில் இருந்து புறப்பட்டுள்ளது. இது ஜனவரி 15 முதல்  21 – க்கு இடைப்பட்ட தேதிகளில் தலைநகரின் எல்லையை முற்றுகையிட உள்ளது. ஏற்கனவே மக்கள் தேசிய இயக்க கூட்டணியின்  (என்ஏபிஎம்)  தொழிலாளர்கள் ராஜஸ்தானின் ஷாஜகான்பூர் எல்லையை அடைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவிகின்றனர்.

https://tamil.indianexpress.com/india/mega-farmers-protest-more-2000-volunteers-drive-tractor-from-punjab-to-capital-city-241926/