வெள்ளி, 22 ஜனவரி, 2021

தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன? போட்டுக் கொள்ள தயக்கம் தேவையா?

 நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் ஐந்து நாட்களை கடந்துள்ளது. ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் மூலம் இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறது.  இருப்பினும், சில மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இது ‘தடுப்பூசி தயக்கம்’ குறித்த கவலைகளுக்கு வழிவகுத்தது.

தடுப்பூசிகள் அறிவியலின் ஒரு தயாரிப்பு. தரவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியில்  நிரூபிக்கப்பட்ட செயல்முறையை துல்லியமாக பின்பற்றினால், சந்தேகத்திற்கு இடமில்லை.

எனவே, தடுப்பூசிகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை இங்கே காணலாம்.

தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன ? 

தடுப்பூசி என்பது நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்குத் தூண்டப்படுகிறது.

தடுப்பூசி நிர்வகிக்கப்படுவதால் நோய்த் தொற்று பாதிப்பு  விரைவில் கட்டுபடுத்தப்படும் என்பதனை அறிவியல்  சான்றுகள் காட்டுகின்றன;  மனிதர்களுக்கு ஏற்படும் பல  நோய்கள் இப்போது தடுப்பூசியால்  தடுக்கக்கூடியவை. பெரியம்மை, போலியோ போன்ற பல்வேறு கொடிய நோய்கள் ஒழிப்பு முயற்சியைப் போல்,  20-க்கும் மேற்பட்ட கொடிய நோய்களை தடுப்பூசிகள் செயலிழக்க வைத்திருக்கிறது.  உத்தியோகப்பூர்வ அறிக்கையின் படி, ஆண்டுதோறும் 2-3 மில்லியன் இறப்புகளைத் தடுப்பூசிகள் தவிர்க்கின்றன.

இந்தியாவின் சர்வதேச நோய் எதிர்ப்பு சக்தி திட்டம், உலகின் மிகப்பெரியது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது.  குழந்தைகளுக்கு தடுப்பூசிக்காக  செலவழிக்கும் ஒவ்வொரு டாலரும், இந்தியப்  பொருளாதாரத்திற்கு $ 44 ஆக சேர்க்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் எப்படி கோவிட் -19 தடுப்பூசிகள்  உருவாக்கப்பட்டன?

ஒரு தடுப்பூசியை உருவாக்க உண்மையில் பல ஆண்டுகள் ஆகலாம். ஆராய்ச்சி ஆய்வகங்களில் கருத்துருக்கான ஆதாரம் நிறுவப்பட்ட பின்னர், கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்முறைகள் உருவாக்கப்படுகின்றன. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக , மனிதப் பரிசோதனைகள்   மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.

கட்டம் 1: 20-100 தன்னார்வலர்களிடம் தடுப்பு மருந்து நிர்வகிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் தரவுகள் உருவாக்கப்படுகின்றன.

கட்டம் 2: மிகவும் பொதுவான குறுகிய கால பக்க விளைவுகளைத் தீர்மானிக்க பல நூறு தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது. மேலும் தடுப்பூசிக்கு நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு சிறப்பாக பதிலளிக்கிறது என்பதும் ஆராயப்படுகிறது. இது ‘இம்யூனோஜெனசிட்டி’ என அழைக்கப்படுகிறது.

கட்டம் 3: தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டவர்களின்  (placebo or dummy) பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும், தீவிர பக்க விளைவுகள் மற்றும் நோய்த் தொற்றை தடுப்பதில் தடுப்பு மருந்தின் செயல்திறனும் இதில் பரிசீலனை செய்யப்படுகிறது.

தற்போது, கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்து ஒரு வருடத்திற்குள் தயாரகியுள்ளது.  உலகளவில் 68  தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில், 20  மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையை எட்டியுள்ளன. எட்டு தடுப்பு மருந்து வரையறுக்கப்பட்ட அல்லது அவசரகால பயன்பாட்டு ஒப்புதலைப் பெற்றுள்ளன. 2 தடுப்பூசிகள்   வெகுஜனப் பயன்பாட்டிற்குத் ஒப்புதல் பெற்றுள்ளன.

கோவிட் -19 தடுப்பூசிகள் இவ்வளவு விரைவாக உருவாக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

  1. பெருன்தொற்று என்பதால் உலகம் முழுவதும் நோய்த் தொற்று தொடர்பான தகவல் பரிமாற்றமும், ஒத்துழைப்பும் சீராக இருந்தது.
  2. மேலும், கொரோனா வைரஸ், 2003ல் ஏற்பட்ட சார்ஸ், 2014ல் ஏற்பட்ட மெர்ஸ் போல மக்களிடம் பரவக் கூடியதாக இருந்தது. சார்ஸ், மெர்ஸ் வகை வைரஸ் பாதிப்புகளுக்கு  ஏற்கனவே கணிசமான வேலைகள் செய்யப்பட்டுள்ளன.
  3. உதாரணமாக, மாடர்னா நிறுவனம் கொரோனா வைரஸின் மரபணு வரிசை கிடைத்த 63 நாட்களில்     தனது MRNA-1273 தடுப்பூசியின்  முதல் கட்ட சோதனையில் இறங்கியது.

அரசாங்கங்களின் முதலீடுகள், புதுமையான நிதி மாதிரிகள் அனைத்தும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிதி அபாயங்களையும் உள்வாங்காமல் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட அனுமதித்தன.

கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்க கிடைக்கக்கூடிய ஒவ்வொரு தடுப்பூசி தளத்தையும் பயன்படுத்துவது மற்றொரு முக்கியமான காரணமாக அமைந்தது.

உதாரணமாக, தடுப்பூசி போல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கமால், உடலில் வைரஸ் புரதத்தை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை கொண்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்தது. வைரஸ் புரதம்  மூலம் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும். இந்த தொழில்நுட்பம் புற்றுநோய் சிகிச்சையில்  சுமார் ஒரு தசாப்த காலமாக வளர்ச்சியில் இருந்தது.

இதேபோல், நான் ரெப்ளிகேட்ங் வைரஸ் திசையன்கள் பல ஆண்டுகளாக வளர்ச்சியில் இருந்தன. 2014-16 எபோலா தொற்று காலத்தில் மேற்கு ஆபிரிக்காவில் சுமார் 60,000 பேருக்கு அடினோவைரஸை அடிப்படையிலான எபோலா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது முந்தைய கட்டங்களில் சிம்பன்சி அடினோவைரஸ் அடிப்படையிலான பல தடுப்பூசிகளை முயற்சித்து வந்தனர். AZD1222 என்ற கோவிட்- 19  தடுப்பூசியை உருவாக்க இந்த தளம் மறுபயன்பாடு செய்யப்பட்டது.

வைரஸை செயலற்றதாக்கும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி  செயல்முறையும் மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

ஒவ்வொரு தளத்தின் வரம்புகளையும் புரிந்துகொள்வது முக்கியம். எம்.ஆர்.என்.ஏ என்பது உடையக்கூடிய மூலக்கூறு ஆகும்.  குளிர்ப் பதனக் கிடங்குகளில் இதனை சேமிப்பது மிகவும் அவசியமாகும். இது, தடுப்பூசி விநியோகத்தை மேலும் சிக்கலாக்குகிறது.

வைரஸ் திசையன் தடுப்பூசிகள் மிகவும் நிலையானவை (2 முதல் 8 டிகிரி சி சேமிப்பு), என்றாலும் அதே திசையன் அதே நபருக்கு மற்றொரு நோய்க்கு பயன்படுத்த முடியாது.  ஏனெனில் திசையன் எதிர்ப்பு நோய் எதிர்ப்பு சக்தி அதை பயனற்றதாக ஆக்கும்.

வைரஸை செயலற்றதாக்கும் தடுப்பூசிகள் பொதுவாக பாதுகாப்பானவை என்றாலும், சுவாச ஒத்திசைவு வைரஸ் மற்றும் அம்மை நோய்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தியதில் பல சிக்கல்கள் எழுந்தன. இதன், காரணமாக தடுப்பூசி உடனடியாக திரும்ப பெறப்பட்டது.

ஒப்புதல் அவசரமாக வழங்கப்பட்டதா? 

பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு  ஒப்புதல் வழங்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை தொற்றுநோய் வழங்கியுள்ளது.

கட்டுப்பாட்டாளர்கள் வரையறுக்கப்பட்ட அவசரக்கால மருந்துப் பயன்பாடு என்பதன் கீழ் ஒப்புதல் வழங்குகின்றனர். இந்த செயல்முறையின் கீழ், முதல் இரண்டு கட்ட தரவுகளும், மூன்றாவது கட்டத்தின் முதல் 70 நாட்கள் (ஐரோப்பிய), இரண்டு மாதங்கள் (அமெரிக்கா)   கட்டம் 3 பின்தொடர்வின் 70 நாட்கள் (ஐரோப்பிய) தரவுகள் மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்தியாவில், பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு “மருத்துவ சோதனை முறையில்” ஒப்புதல் சில குழப்பங்களுக்கு வழிவகுத்தது. இது ஒரு “தற்காப்பு” தடுப்பூசி என்றும் விவரிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு தயக்கங்கள் மக்கள் மனதில் எழுந்திருக்கலாம். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ளபடி, கோவாக்சின்  தொழில்நுட்பம் பரிட்சயமான ஒன்று. இது பெரும்பாலும் மிகவும் பாதுகாப்பானது.

முன்னதாக, கோவிட்-19 தடுப்பூசிகளை கட்டுப்பாட்டுடன் கூடிய அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்தது குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) விடுத்த செய்திக் குறிப்பில், ” அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அறிக்கையை இந்திய சீரம் மையம் தாக்கல் செய்தது. வெளிநாட்டு மருத்துவ ஆய்வுகளிலிருந்து, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 23,745 பங்கேற்பாளர்களிடமிருந்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் செயல்திறன் தரவை சீரம் மையம் சமர்ப்பித்தது. ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறன் 70.42 சதவீதம் என கண்டறியப்பட்டது. மேலும், நம் நாட்டில் 1600 பங்கேற்பாளர்களிடம் 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த இந்திய சீரம் மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டன. இது வெளிநாட்டு ஆய்வுகளுடன் ஒப்பிடும் வகையில் இருந்தது கண்டறியப்பட்டது. விரிவான ஆய்வுக்குப்பின், சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு, சில ஒழுங்குமுறை நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்நிறுவனம் நம் நாட்டில் மேற்கொள்ளும் பரிசோதனை தொடரும்.

பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் இந்திய அளவிலும் உலகளவிலும் சிறப்பாக இருந்தது.

இந்த நிறுவனம் எலிகள், முயல்கள் போன்ற பல்வேறு விலங்கு இனங்களில் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் தரவை உருவாக்கி ஆய்வுகளை நடத்தியது. அனைத்து தரவுகளும், மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்துடன் பகிரப்பட்டது. முதல் மற்றும் 2ம் கட்ட சோதனைகள், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, சிறந்த எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதை நிருபித்தன. 3ம் கட்ட பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் 22,500 பேருக்கு , கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை நிபுணர் குழு ஆய்வு செய்து, அவசர சூழலுக்கு கட்டுப்பாடுகளுடன் இந்த தடுப்பூசியை பயன்படுத்த பரிந்துரை செய்தது. இந்நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் பரிசோதனையும் தொடரும்” என்று தெரிவித்தது.

source https://tamil.indianexpress.com/explained/covid-19-vaccine-information-corona-virus-vaccine-hesitancy-in-india-vaccine-faq-243458/