திங்கள், 25 ஜனவரி, 2021

அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்

 டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அரசும், பாஜகவும்  மறுத்து விட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், “தேசிய பாதுகாப்பு, அலுவல்முறை இரகசியங்கள் சட்ட மீறல்கள் குறித்து கால அவகாச நிபந்தைனைக்கு உட்பட்ட விசாரணை தேவை” என்று வலியுறித்தியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தொடர்ச்சியான மௌனத்தை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மற்ற இந்தியர்களின் தேசபக்தியை மதிப்பிட்டு, தேசியவாத சான்றிதழ்கள் வழங்கியவர்களின் உண்மை முகங்கள் முற்றிலும் அம்பலமாகி உள்ளது” என்று கூட்டத்தில் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ” இந்த விவகாரத்தில் நாங்கள் ஏன் தேவையின்றி நுழைய வேண்டும். அர்னாப் கோஸ்வாமியின் உரையாடலில்  அரசாங்கத்துக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.  நிரூபிக்க எதுவும் இல்லை,” என்று கூறினார்.

தேசத்தின் “முக்கிய” இராணுவ நடவடிக்கைகள் குறித்து கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தகவல் கசியவிடப்பட்டது  என்ற காங்கிரஸின் குற்றச்சாட்திற்குப் பதிலளித்த அவர், ”  2019 பாலகோட் வான் தாக்குதல் குறித்து கோஸ்வாமி எதையும் புதிதாக சொல்லவில்லை. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கட்சியின் பல தலைவர்கள் இத்தகைய எச்சரிக்கையை முன்வைத்தன. பிரதம மந்திரி முதல் அமைச்சர்கள் வரை புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தனர்” எனத் தெரிவித்தார்.

இருப்பினும், அர்னாப் கோஸ்வாமி விவகாராம் சில சங்கடங்களுக்கு நிர்பந்தித்திது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய மத்திய அமைச்சர் உட்பட ஆறு பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பிரகாஷ் ஜவடேகர், முன்னாள் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிடோரைப் பற்றிய கோஸ்வாமியின் தவறுதலான சித்தரிப்பும்; தாஸ்குப்தாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதம மந்திரி அலுவலகம் (பி.எம்.ஓ) உள்ளிட்ட மேல்மட்ட அரசியல் தலைமையுடன் பேசுவதாக அர்னாப் அளித்த உறுதிமொழியும், ‘அனைத்து அமைச்சர்களும் நம்முடன் தான் இருக்கிறார்கள்’ என்ற அர்னாபின் கருத்தும் பாஜக கட்சியில் சில சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில், கடந்த நவம்பர் மாதம் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறை  கைது செய்து சிறையில் அடைத்தபோது, பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் தங்களது  எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜவடேகர், எஸ்.ஜெய்சங்கர், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி நாடா ஆகியோர் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்றும்  வெளிப்படையான தாக்குதல் என்றும் கூறியிருந்தனர்.

“மகாராஷ்டிரா அரசாங்கமும் காவல்துறையும் கோஸ்வாமியை திட்டமிட்டு குறிவைத்த காரணத்தினால் ஆதரவு குரல் நீட்டப்பட்டது. ஆனால், அண்மை நிகழ்வுகள் முற்றிலும் வேறுபட்டது. தவறு நடந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் ” என்று பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/congress-demanded-a-time-bound-investigation-in-arnab-goswami-whatsapp-chat-gate-243830/

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நீரா ராடியா பேசிய உரையாடல்களுக்கு  (ராடியா டேப் ) இணையாக பாஜகவுக்கு அர்னாப் வாட்ஸ்அப் உரையாடல் ( அர்னாப் கேட்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறைந்தது இரண்டு பாஜக தலைவர்கள் தெரிவித்னர்.

2014 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிரான தேர்தல் பிரச்சாரத்தில் ‘ராடியா டேப்’ விவகாரத்தை பாஜக கடுமையாக பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கில் இன்னும் என்னவெல்லாம் வெளிவரும் என்று எங்களுக்குத் தெரியாது. வாட்ஸ்அப் உரையாடல்களுக்கும், அரசாங்கத்திற்கும்  எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று ஒரு தலைவர் கூறினார். டிஆர்பி மோசடி வழக்கில் சட்டம் தனது கடமையை செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, பொய்க் குற்றச்சாட்டுகளை பரப்பி வரும் காங்கிரஸ் கட்சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கோஸ்வாமி எச்சரித்துள்ளார்.

பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான, உள்நோக்கத்துடன் வாட்ஸ்அப் அரட்டைகளை மும்பை காவல்துறை கசியவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. இருவரும், தொழில்முறை சார்ந்த விசயங்களை பேசியுள்ளனர் என்று தாஸ்குப்தா வழக்கறிஞர் அர்ஜுன் சிங் தாக்கூர் தெரிவித்தார்.