செவ்வாய், 26 ஜனவரி, 2021

உடலோடு தொடர்பு இருந்தால் மட்டுமே போக்சோ சட்டம்: மும்பை நீதிமன்றம் உத்தரவு

 கடந்த 2016 – ம் ஆண்டு, சதீஷ் பாண்டு ராக்தே என்பவர் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டிற்கு வந்தால் கொய்யா பழம் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். அதோடு அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார். சிறுமியைத் தேடி வந்த தாயிடம், சிறுமி மாடியில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருப்பதாக ராக்தே கூறியிருக்கிறார். ஆனால் ‘தன்னுடைய ஆடையை கலைக்க முயற்சி செய்ததோடு, மார்பக பகுதியை தொட்டு பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான்’ என்று அந்த சிறுமி தாயிடம் கூறியுள்ளது. எனவே சிறுமியின் தாய் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தார்.

இதை விசாரித்த கீழ் நீதிமன்றம் நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தற்காக  ராக்தேவுக்கு போக்ஸோ சட்டத்திற்கு கீழும், இந்திய தண்டனைச் சட்டம், 354, 363 மற்றும் 342 ஆகியவற்றிற்கு கீழும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ராக்தேவின் வழக்கறிஞர் சபாஹத் உல்லா உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு குறித்து மும்பை நீதி மன்றத்தின் நாக்பூர் அமர்வின் நீதிபதி புஷ்பா வி கணேடிவாலா கூறியதாவது:

ஒருவருக்கு போக்ஸோ சட்டம் பிரிவு 8-ன்  கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டுமானால், அவர் உடலோடு உடல் தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அதோடு கடுமையான குற்றச்சாட்டும், முறையான ஆதாரமும் இருக்க வேண்டும். ஆனால் குற்றவாளி ராகதே சிறுமியின் மார்பக பகுதியை தொட்டு பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதற்கு இந்திய தண்டனை சட்டம் 354-ன் கீழ் தண்டனை வழங்கப்படலாம்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏதும்  வாதத்துக்கு உகந்தாக இல்லை. வன்கொடுமை சட்டத்திற்கு கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனில் உடலோடு உடல் தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அதோடு பாலியல் வன்கொடுமை செய்ததற்கான நோக்கம் இருந்திருக்க வேண்டும். இந்த வழக்கில் அது ஏதும் காணப்படவில்லை. அதோடு போதிய ஆதாரமும் இல்லை” என்று கூறி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/sexual-assault-under-pocso-needs-skin-to-skin-contact-says-bombay-hc-244144/