வியாழன், 28 ஜனவரி, 2021

அடுத்த ‘மூவ்’ என்ன?

 – அருண் ஜனார்தனன்

VK Sasikala Political Chance :சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், சென்னை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும்.

இந்நிலையில் சசிகலா சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினால் தமிழக அரசியலில் அவருக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், சசிகலா சிறை செல்வதற்கு முன் முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தி தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் முதல்வராக சசிகலாவால் கை காட்டப்பட்ட தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்து, கட்சியின் உயர் பதவியில் இருந்து வருகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழியாக மூன்று தசாப்தங்களாக (பத்தாண்டுகள்) இருந்த மரியாதைக்கு கூட பார்க்காமல் அவருக்கு கட்சியில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போது, ​​சசிகலாவின் நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் உறவினர்களின் கருத்துப்படி, சசிகலாவுக்கு முன் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. மேலும் சசிகலா விடுதலையாவதற்கு முன் பல்வேறு அரசியல் முகாம்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் மும்முரமாக உள்ளனர்.

வாய்ப்பு 1: மீண்டும் அ.இ.அ.தி.மு.க –வுடன் இணைவது :

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் சசிகலா மீண்டும் அஇஅதிமுக -ல் சேர ஒரு தெளிவான வாய்ப்பு உள்ளது. இதில்”சசிகலா கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டால், அவர்கள் அரசாங்கத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம். ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தோல்வியடைந்தால் கட்சியில் அவர்கள் சசிகலாவின் கீழ் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த காரணத்தால் முதல்வர் பழனிசாமி இந்த யோசனைக்குத் தயாராக இல்லை ”என்று இருவருக்கும் நெருக்கமான மூத்த அஇஅதிமுக தலைவர் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு 2: அஇஅதிமுக மற்றும் அமமுக இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது:

சசிகலா அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவரின் அக்காள் மகன் டிடிவி தினகரன் தொடங்கிய கட்சி அமமுக. ஆனால் இந்த கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது என்று அதிமுகவில் பல வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலா அஇஅதிமுக – க்கு திரும்புவதற்கான வாய்ப்புகளை பழனிசாமி நிராகரித்த பின்னர் மூத்த தலைவர்கள் இந்த யோசனையை ஆதரிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் இன்னும் அறிக்கைகளை வெளியிடவில்லை.

இரு கட்சிகளும் அதைச் செய்வதற்கு காரணங்கள் உள்ளன:

அமமுக நிலைத்து நிற்பதற்கும், இறுதியில் அஇஅதிமுக-க்குள் நுழைவதற்கும், மற்றும் அஇஅதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், ஒரு நேரத்தில் திமுக – வுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை கொண்டுள்ளது.

வாய்ப்பு 3: அமமுக-வில் இணைந்து மூன்றாவது முன்னணியில் செல்வது :

சமீபத்திய முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, ​​வரும் தேர்தலில் அஇஅதிமுக – வை தோற்கடிக்க அமமுக -வை மூன்றாவது முன்னணியை உருவாக்கும் நிலை உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தினகரனின் அமமுக கட்சி சுமார் 4% வாக்குகளைப் பெற்றது, இது அஇஅதிமுக வாக்குகளில் 15% ஆகும். அஇஅதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், மூன்றாவது முன்னணியை உருவாக்குவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும், இந்த முறை அஇஅதிமுக – ல் உள்ள”துரோகிகளை” தோற்கடிக்க இந்த 3-வது அணி உருவாகலாம். “கடந்த முறை (2016), நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சியைத் தோற்கடிக்க அரசாங்க எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து மூன்றாவது முன்னணியை அமைத்தார். இந்த முறை, அமமுக தலைமையிலான மூன்றாவது அணி அரசாங்க சார்பு வாக்குகளைப் பிரிக்கும் ”என்று மூத்த அஇஅதிமுக  தலைவர் தெரிவித்துள்ளார்.

எஸ் ராமதோஸின் பாமக, கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக போன்றவர்கள் மூன்றாம் தரப்பில் இதுபோன்ற சூழ்நிலையில் சேர வாய்ப்புகள் உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பகிர்வு தொடர்பாக ஏதேனும் மோதல்கள் அல்லது சச்சரவுகள் ஏற்பட்டால் இந்த மூன்றாவது முன்னணியில் அதிக கூட்டணிகள் பெற உதவும்.

இது குறித்து சசிகலா குடும்பத்தின் நெருங்கிய வட்டாரம் கூறுகையில், பழனிசாமி அல்லது பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கட்சியின் மீது முழுமையான கட்டுப்பாடு இல்லை, அரசாங்கத்தை நடத்துவதற்கு அவர்களுடன் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள் . ஆனால் “வரும் தேர்தலில் அஇஅதிமுக தோற்கடிக்கப்பட்டால் முழு கட்சியும் இறுதியில் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்கு வரும் ”என்று சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறியது.

வாய்ப்பு 4: சசிகலா அரசியலில் இருந்து வெளியேறுவது:

உடல்நல பாதிப்பை காரணம் காட்டி ரஜினி அரசியல் முடிவை கைவிட்டதை போல, சசிகலாவும், அரசியலில் இருந்து விலகுவார் என  நம்புபவர்களும் உள்ளனர்.  ஆனால் அவருடன் நெருக்கமாக பணியாற்றியவர்கள் அவரை விடமாட்டார் என்று நம்புகிறார்கள். மேலும் அவர் பெங்களூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மூன்று முறை தரையில் அடித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/explained/political-chance-for-vk-sasikala-after-release-244465/