திங்கள், 18 ஜனவரி, 2021

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு உட்படுத்த வேண்டும்- தமிழ் அமைப்புகள் கடிதம்

 இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை உட்படுத்த இலங்கை  தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும்,  தமிழ் சிவில் அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளன.

கடந்த ஜனவரி 15ம் தேதி எழுதிய கடிதத்தில்,    இலங்கையின் படைத்தரப்பினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாப்போம் என்று இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக அரசியல் தலைவர்கள் கூறி வந்துள்ளார்கள். ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாக இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இராணுவ மயமாக்கல், அரசியல் கைதிகளைக் காலவரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நில அபகரிப்பு, மேய்ச்சல் தரை போன்ற தமிழ் மக்களின் பாரம்பரியமானதும் கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பதைத் தீவிரப்படுத்துதல், கொரோனா நோயால் இறக்கும் முஸ்லிம் சகோதரரின் ஜனாஸா அடக்கத்தை மறுத்தல், நினைவேந்தல் உரிமையை மறுத்தல் போன்ற தமிழ் மக்களுக்கு எதிராகத் தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையானது மோசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையை கோடிட்டுக் காட்டுகின்றன.

 

 

இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40/01 தீர்மானத்தின் கீழ் இலங்கை அரசின் உறுதிமொழி குறித்து  ஆராய்வதற்காகக் வரும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமைகள் சபை, “இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டது என்றும், இதனை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உள்ளடக்கிய  இறுதித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்” என்று கடிதத்தில் கோரப்பட்டது.

மேலும், இனப்படுகொலை,  போர்க்குற்றங்களை விசாரிக்க இலங்கையை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும்.

ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கின்ற பொறிமுறை போன்றதொன்றை (கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு) ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகளையும் நாங்கள் தீர்மானத்தில் கோருகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

source: https://tamil.indianexpress.com/international/srilanka-tamil-parties-joint-letter-to-un-human-rights-council-for-war-crimes-accountability-242869/