வெள்ளி, 8 ஜனவரி, 2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை

 இந்தியாவின் எதிரி சொத்துக்கள் பாதுகாவலர் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செபி அதிகாரிகள், சென்னையில் ஆர்மீனியன் தெருவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகத்தை புதன்கிழமை சீல்வைக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்தியாவின் எதிரி சொத்துக்களின் பாதுகாப்பு அதிகாரிகள் (சி.இ.பி.ஐ) அல்லது செபி அதிகாரிகள், எதிரி சொத்துச் சட்டத்தின் கீழ், சென்னையில் ஆர்மீனியன் தெருவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமை அலுவலக கட்டடத்தை புதன்கிழமை சீல் வந்தனர். அதை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமை அலுவலகம் சென்னையில் ஆர்மீனியன் தெருவில் உள்ள அந்த கட்டடத்தில் கடந்த 12 ஆண்டுகளக செயல்பட்டு வருகிறது. அதற்காக நாங்கள் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் அதிகாரிகளுக்கு வாடகை செலுத்தி வருகிறோம்.” என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணை தலைவர் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இந்தியாவில் எதிர் சொத்து என்பது நாடு பிரிவினைக்குப் பின்னர், பாகிஸ்தான் நாட்டு குடியுரிமையை ஏற்றுக்கொண்டவர்களின் சொத்துக்கள் நிறுவனங்களையும், 1965 மற்றும் 1971ம் ஆண்டு போர்களை அடுத்து பாகிஸ்தான் குடியுரிமை எடுத்துக் கொண்டவர்களின் சொத்துக்கள், நிறுவனங்களைக் குறிக்கிறது. அதே போல, 1962ம் ஆண்டு இந்தியா – சீனா போருக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து சீனாவுக்குச் சென்ற மக்கள் விட்டுச்சென்ற சொத்துக்களும் எதிரி சொத்து என்று அழைக்கப்படுகிறது.

செபி இந்த சொத்துக்களின் பாதுகாவலர் ஆகும். உள்துறை அமைச்சக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் 9,406 எதிரி சொத்துக்கள் உள்ளன. அதில், 9,280 பாகிஸ்தான் நாட்டினருடையதும் 126 சொத்துக்கள் சீன நாட்டினருடையதும் அடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளன. மேலும், எதிரி சொத்துக்கள் என்று 5,866 சொத்துக்கள் சரிபார்ப்பில் நிலுவையில் உள்ளதாக உள்துறை அமைச்சக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இத்தகைய எதிரி சொத்துகளில் வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகம் செயல்பட்டுவரும் கட்டிடத்தை, மும்பையில் உள்ள செபி அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரிகள், உள்ளூர் வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசாரை அழைத்துச் சென்று புதன்கிழமை வளாகத்தை சீல் வைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அலுவலகத்தை, சீல் வைக்கும் செய்தி பரவிய நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் அந்த இடத்துக்கு வந்து அலுவலகத்தை சீல் வைக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் அப்துல் ரஹ்மான் கூறுகையில், “எங்களுக்கு அதிகாரிகளிடமிருந்து எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இது எங்கள் மாநில தலைமையகம். எங்கள் ஜமாஅத் தன்னார்வலர்கள் இயற்கை பேரழிவுகளின் போது அனைத்து நிவாரணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். நாங்கள் நிறைய சேவைகளை செய்கிறோம். எனவே எங்களுக்கு நேரம் கொடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டோம். இந்த விவகாரத்தில் நாங்கள் சட்ட ரீதியான உதவியை நாடுகிறோம்” என்று கூறினார்.

செபி அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை சீல் வைக்க முயற்சித்தது குறிட்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், செபி அதிகாரிகள் சென்னை மாவட்ட ஆட்சியரை அணுகியதாகக் கூறினார்கள். இந்த அலுவலகம் அலுவலகம் என்பதைத் தாண்டி, பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் கட்டிடத்திற்கு சீல் வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அலுவலகத்தை செபி அதிகாரிகள் சீல் வைக்க முயன்ற சம்பவம் குறித்து அறிந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ-வும் மஜக பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுல் லுஹா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, “மழை வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது உணவு, மருந்து என வினியோகித்து மிகப் பெரிய சமூக சேவையாற்றும் ஒரு அமைப்பை மத்திய அரசு சீண்டுவதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செபி அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டப்பூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மஜக துணை நிற்கும் என்றும் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mha-officials-try-to-seal-tamil-nadu-thowheed-jamaath-head-office-in-chennai-rise-tensions-241351/