வெள்ளி, 3 செப்டம்பர், 2021

அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியல்; டாப் 5 இடங்களில் தமிழகம் இல்லை

 02.09.2021  தமிழத்தில் தினந்தோறும் 5 லட்சத்திற்கு மேலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது எனவும், செப்டம்பர் மாதத்திற்கான மாநில ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிப்பதால், விரைவில் தினசரி தடுப்பூசிகளை குறைந்தபட்சம் 6 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். இருப்பினும், அதிக கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் டாப் 5 இடத்தில் தற்போதைக்கு இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்னடைவை சந்திக்க முக்கிய காரணம் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தடுப்பூசிகள் கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்தாதது தான். மற்றும் போதுமான எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போடவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. மற்றும் ஒரு நாளைக்கு சராசரியாக 61,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், குஜராத் மற்றும்ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் தடுப்பூசியை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 116 நாட்களில் சுமார் 2.6 கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளோம்.” என்றார்

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவில், குஜராத்தில் 70% மக்களும், ராஜஸ்தானில் 65% பேரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா (80%), கர்நாடகா (66%) மற்றும் ஆந்திரா (56%) ஆகியவை அதிக மக்கள்தொகையைக் கொண்டு இருந்தாலும் 50 சதவீதத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்தியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை வெறும் 40% க்கும் குறைவான தடுப்பூசிகளே செலுப்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது. மேலும், 18 வயதிற்குமேல் உள்ள 6 கோடி பேரில்10% பேர் மட்டுமே இரண்டு டோஸ்களையும் முடித்திருப்பதாக தரவு காட்டுகிறது.

“செப்டம்பர் மாதத்திற்கு 1.4 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்தி இலவச தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை நாங்கள் உயர்த்தியுள்ளோம். வரவிருக்கும் நாட்களில் தினசரி தடுப்பூசிகளை குறைந்தது 6 லட்சமாக உயர்த்துவோம், ஒவ்வொரு நாளும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திறன் எங்களிடம் உள்ளது.” என அமைச்சர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

மாநில சுகாதாரத் துறை தடுப்பூசி பிரிவின் தரவுவின் படி, அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி பயன்பாடு 90% க்கும் அதிகமாக உள்ளது. சில மாவட்டங்களில் தடுப்பூசி பயன்பாடு 104% வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு மாவட்டங்கள் 100% தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளதாகவும், ஒன்பது மாவட்டங்களில் தடுப்பூசி பயன்பாடு 100% க்கும் அதிகமாக உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/uncategorized/tamil-nadu-news-in-tamil-tn-vaccination-data-by-minister-ma-subramaniam-tamil-news-338019/

Related Posts: