செவ்வாய், 28 செப்டம்பர், 2021

பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயம்; அன்பில் மகேஸ்

 பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயம் தனி பாடமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 28 09 2021 

சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக கலையரங்கில் தேசிய மரபுசார் விதை மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன், பாண்டிச்சேரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் பாரம்பரியத்தின் அருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படும் எனவும் பாரம்பரியம் மிகுந்த நமது மரபுசார் பாரம்பரிய அரிசிகளை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன் 14 மாவட்டங்களில் 200 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை அரசு மேற்கொண்டுள்ளது என்றார். தொடர்ந்து உழவர்களுக்கு பாரம்பரிய நெல்லை இலவசமாக வழங்கினார்.

மேலும் விழாவில் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களான பாரம்பரிய அரிசி, மரபுசார்ந்த காய்கறி விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட பாரம்பரிய உற்பத்தி பொருட்கள், கலைப்பொருட்கள், மரக்கன்றுகள், உணவுப்பொருட்கள் கொண்ட பல்வேறு வகைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கண்காட்சி அரங்கை பார்வையிட்டு பாரம்பரிய மரபு உற்பத்தி பொருட்களை வாங்கிச் சென்றனர்.

source https://news7tamil.live/natural-agriculture-in-the-curriculum-minister-anbil-mahesh.html