செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இல்லாத கொழுந்தியாள் வீட்டு விழாவிற்காக, ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணித்தேனா? பிடிஆர் பதிலடி

 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவர் கலந்துக் கொள்ளாதது தொடர்பாக ட்வீட்டரில் வதந்திகளை பரப்பியவர்களுக்கு எதிராக கடுமையான ட்வீட்களையும் பிடிஆர் பதிவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர், எனக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு வந்தது, கூட்டத்தில் விவாதிக்க போகின்ற விவரங்கள் குறித்தும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென நேரடியாக லக்னோ வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

மேலும், கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் தெரிவிக்கிறார்கள். நான் ஏற்கனவே நிறைய நிகழ்ச்சிகளுக்கு வருவதாக நேரம் ஒதுக்கிட்டேன். அதனால் என்னால் செல்ல இயலவில்லை என்றும் நிதியமைச்சர் கூறினார்.

ஆனால் நிதியமைச்சர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளாததை, இணையத்தில் பலர் தவறாக திரித்து ட்வீட் செய்தனர். நியூஸ் பிரேக்கிங் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து பொய்யான தகவல்களை பரப்பினர். அவ்வாறான ஒரு ட்வீட்டில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும் நாளில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று வதந்தி பரபரப்பப்பட்டது.

இன்னொரு ட்வீட்டில், கொழுந்தியாள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு கலந்து கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என நிதியமைச்சர் கூறுவதுபோல் போட்டோஷாப் செய்து வதந்தி பரபரப்பட்டது.

மற்றொரு நபர் ஒரு படி மேலே போய், நிதியமைச்சர் பிடிஆர், லக்னோ செல்ல வேண்டும் என்றால் மூன்று விமானம் மாறி செல்ல வேண்டும். இதை விரும்பாத அவர், தமிழக முதல்வரிடம் தனி விமானம் கேட்டார். முதல்வர் மறுத்துவிட்டார். இதனையடுத்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானா அமைச்சர்கள் தனி விமானத்தில் செல்கிறார்கள் என்ற ஈகோ காரணத்தால் பிடிஆர் இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று வதந்தி பரபரப்பினார்.

இது போன்ற வதந்திகளை பரப்பிய ட்வீட்டர் ஐடிகளை டேக் செய்தும், ரீ ட்வீட் செய்தும் பிடிஆர் பதிலடி கொடுத்து வருகிறார். கொழுந்தியாள் குறித்த வதந்திக்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர், இது வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும், பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமாடா, மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா, என்று கடுமையாக சாடியுள்ளார்.

தனி விமானம் கிடைக்காத காரணத்தால் கூட்டத்தை புறக்கணித்ததாக வெளியான செய்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ள பிடிஆர், காலாவதியான உங்களை போன்ற நபர்களுக்கு ஒன்று சொல்கிறேன். உள்நாட்டு விமான பயணங்கள் இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது. மதுரையில் இருந்து லக்னோ செல்ல இரண்டு விமானம் போதும். கூகுளில் சர்ச் செய்து பார்த்தாலே தெரியும். கூகுள் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், ஒன்றுக்கொன்று முரன்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே, நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா?  அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா?  கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ட்வீட்டில் எனக்கு கொடுக்கப்பட்ட தனி விமானத்தை நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். சிறிய விமானம் குறித்து கொஞ்சம் பயம் மற்றும் ஏற்கனவே இருந்த அப்பாயின்மென்ட் காரணமாக மறுத்துவிட்டேன். இதை வைத்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள். என பதிவிட்டுள்ளார். மேலும் எனக்கு கொழுந்தியாள் இல்லாத நிலையில், இதை எல்லாம் வைத்து சிலர் பொய் செய்தியை பரப்புகிறார்கள். அதை சிலர் பகிர்ந்தும் வருகிறார்கள் என நிதியமைச்சர் பிடிஆர் விமர்சித்துள்ளார்.

இதேபோல் வதந்தி பரப்புவோர்களுக்கும் தவறான தகவலை பரப்புவோர்களுக்க்கும் நிதியமைச்சர் பிடிஆர் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/finance-minister-ptr-retaliates-against-spread-rumors-on-absence-of-his-gst-council-meet-343342/