ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

கனிமொழி எம்.பி அதிரடி


Image
இந்துமத பாதுகாவலர்கள் நாங்கள் தான் என கூற பாஜகவுக்கு உரிமை இல்லை கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டம் ராமநாதபுரம் சந்தை திடலில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக மகளிரணி தலைவியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி குடியுரிமை சட்டம் பற்றி விளக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற அப்படி என்ன அவசரம் என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் சொத்துகளை அரசே தனியாருக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு யாரை எல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களை எல்லாம் குடியுரிமை சட்டம் மூலம் தண்டிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய கனிமொழி, பெண்களுக்கான குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்கள் இல்லை. மத்திய அரசை எதிர்க்கும் விவசாயிகள் உள்ளிட்ட எதிர் கருத்துகள் தெரிவிப்போருக்கு குடியுரிமை இல்லை என மத்திய அரசு சொல்லி விடும் என்றார்.
யாரையும் பழிவாங்கும் ஆயுதமே குடியுரிமை சட்டம் என்ற அவர், திருக்குறளை தேசிய புத்தகமாக அறிவிக்க மாட்டார்கள். ஏனெனில் அது தமிழில் எழுதப்பட்டதால் தேசிய நூலாக அறிவிக்க மாட்டார்கள். நம் அடையாளம், ஒற்றுமையே தமிழ் தான் என்று கூறினார்.
மேலும், அவர்களுக்கு பிடித்த நடிகர்களை தேடிப் பிடித்து குடியுரிமை சட்டத்தால் ஆபத்தில்லை என பிரசாரம் செய்கின்றனர். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றதால், மத்திய அரசு நினைத்ததை எல்லாம் நிறைவேற்ற திட்டமிடுகிறது என்று கனிமொழி குற்றம்சாட்டினார். பாகிஸ்தானை பற்றி எந்நேரமும் பேசிக்கொண்டு, யோசித்து கொண்டு இருப்பவர் பிரதமர் மோடி ஒருவரே என்று விமர்சித்த அவர், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவார் என எண்ணி வாக்களித்த பெரும்பான்மை இந்துக்களுக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக சொல்லும் இந்து மதம் தமிழகத்தில் இல்லை. இந்து மத பாதுகாவலர் என கூற பாஜகவுக்கு உரிமை இல்லை என்று கூறிய கனிமொழி, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை மற்றொரு விடுதலை போர் என்று குறிப்பிட்டார்.
credit ns7.tv