வியாழன், 27 பிப்ரவரி, 2020

டெல்லி கலவரம் : குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்க சென்ற அப்பா உட்பட 33 பேர் பலி! என்னுடைய குழந்தைகள், மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை - அக்பரியின் மகன்.

டெல்லி கலவரம் : குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்க சென்ற அப்பா உட்பட 33 பேர் பலி! என்னுடைய குழந்தைகள், மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை - அக்பரியின் மகன். 
டெல்லி கலவரம் :  புதிதாக திருமணம் ஆனவர், ஒரு கார்பெண்டர், ஒரு டி.ஜே., ஒரு தொழில் முனைவோர், கட்டிடத் தொழிலாளி, குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கச் சென்ற அப்பா… இது வரை டெல்லி கலவரத்தில் இறந்து போன 27 நபர்களில் இவர்களும் அடக்கம். கடந்த மூன்று நாட்களாக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் சிக்கி இவர்கள் உயிரிழந்தனர். செவ்வாய் கிழமை மாலை வரை 13 நபர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் புதன் கிழமை அந்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. அதிக காயங்களால் பாதிக்கபட்டவர்கள், சிகிச்சை பலனின்றி போனதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
குரு தேக் பகதூர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீபக் குமார் (34), இஷாக் கான் (24), முகமது முதாஸ்ஸீர் (30), விர் பான் (50), முகமது முபாரக் ஹூசை (28), ஷான் முகமது (35), பர்வேஷ் (48), ஜாஹீர் (24), மெஹ்தாப் (22), ஆஷ்ஃபாக் (22), ராகுல் சோலான்கி (26), ஷாகித் (25), முகமது ஃபுர்கான் (30), ராகுல் தாக்கூர் (23), ரத்தன் லால் (42), அன்கித் ஷர்மா (26), தில்பார், மொஹ்ஷின் அலி (24), வினோத் குமார் (50). லோக் நாயக் மருத்துவமனையில் மஹ்ரூஃப் அலி (30), அமான் (17) ஆகியோரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதி உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆஷ்ஃபாக் ஹூசைன், முஸ்தஃபாபாத் பகுதியில் வசித்து வந்த 22 வயது இளைஞனின் கழுத்தில் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளது. அல் ஹிந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் ஜி.டி.பி. மருத்துவமனைக்கு அடுத்த நாள் காலை எடுத்து வரப்பட்டது.
அவருக்கு பிப்ரவரி 14ம் தேதி தான் திருமணமானது என்று கூறுகிறார் அவருடைய மனைவி தஸ்நீம். அவர் அன்று விரைவாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைத்தார். ஆனால் கலவரங்களின் காரணமாக அவரால் விரைவாக வீடு திரும்பவில்லை. மருத்துவமனையில் வெகு நேரம் காத்திருந்துவிட்டு வீடு திரும்பிய அவருடைய உறவினர்கள் இன்று ஆஷ்ஃபாக்கின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுச் செல்கின்றனர்.
பால் வாங்கச் சென்ற அமன் முகத்தில் குண்டு பாய்ந்துள்ளது. ஜஃப்ராபாத் மெட்ரோ ஸ்டேசன் அருகே நடைபெற்ற கலவரத்தில் இவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய கன்னத்தில் குண்டு பாய்ந்துள்ளது.  19 வயதான் விவேக் சௌத்ரி தலையில் வாட்டர் மோட்டர் செலுத்தப்பட்டிருந்தது. அதனை நியூரோ சர்ஜரி பிரிவில், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வெடுத்துவருகிறார். அவருடைய சகோதரி பபிதா அவருடன் இருந்து, அவரை கவனித்து வருகிறார்.
பிரஹாம்பூரியில் மருந்துகளை வாங்கச் சென்ற நிதின் குமார் மற்றும் அவருடைய தந்தையை சரமாரியாக ஒரு கும்பல் தாக்கியுள்ளது. அவர்கள் வந்த இரு சக்கர வாகனம் தீக்கிரையானது. சாலையில் மயங்கிக் கிடந்த இருவரையும் யாரோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று நினைவு கூறுகிறார் குமார்.
ப்ரிஜ்பூரியில் அமைந்திருக்கும் இந்து முஸ்லீம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மெஹ்தப். பால் வாங்க சென்றிருந்தார். கலவரம் காரணமாக அந்த குடியிருப்பு பகுதியின் கேட்கள் பூட்டப்பட்டது. மெஹ்தப்பினை ஒரு குழு சரமாரியாக தாக்கியது. கேட்டில் இருந்து அவருடைய குடும்பத்தினர் கதறி கெஞ்சிய போதும் அவரை அந்த வன்முறை கும்பல் பயங்கரமாக தாக்கியது.
2 நாட்களாக வீடு திரும்பாமல் இருந்த மொஹ்ஷீன் அலியின் உடலை தேடிக் கொண்டு பிணவறைக்கு வந்தனர் அவருடைய குடும்பத்தினர். ஹர்ப்பூரை சேர்ந்த இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. தலையில் காயங்களுடன் அவர் பிணவறையில் இருந்தார்.
புதன்கிழமை மாலை வரை 5 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரிஜ்பூரி புலியான் பகுதியில் அமைந்திருக்கும் மசூதியில் பிரார்த்தனை செய்யச் சென்ற ஸக்கீர் சாய்ஃபியும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

ஆசிட் வீச்சு

டெல்லி கலவரத்தில் காயம் அடைந்தவர்களில் நான்கு பேர் ஆசிட் வீச்சினால் காயம் அடைந்துள்ளனர். சிவ் விஹாரில் ஒரு கடைக்கு தீயிட்ட கும்பல், அங்கிருந்த பொருட்களையெல்லாம் அள்ளிச் சென்றது. அந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்த நான்கு பேர் மீது ஆசிட் வீசியுள்ளனர். முகமது வக்கீல் முகத்தில் ஆசிடினால் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய 19 வயது மகள் அனம் மீதும் ஆசிட் பட்டுள்ளது.

85 வயது மூதாட்டி எரித்துக் கொலை

கர்மி கிராமத்தில் அக்பரி என்ற வயதான மூதாட்டி எரித்து கொல்லப்பட்டார். முகமது சயீத் சல்மானி என்பவர் அவருடைய இல்லத்தின் முதல் இரண்டு தளங்களிலும் துணிக்கடைகள் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய வீடு தீக்கிரையாக்கப்பட்டது. நான் பால் வாங்க வெளியே சென்ற போது எங்கள் ஏரியாவின் முன் 100 முதல் 150 பேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர். என்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவி அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டனர். வயதான காரணத்தால் என் அம்மாவால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்று கூறுகிறார் அக்பரியின் மகன்.