திங்கள், 17 பிப்ரவரி, 2020

டெல்லி மக்கள் கவலைப்பட தேவையில்லை : கெஜ்ரிவால்

Image
டெல்லி முதலமைச்சராக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். டெல்லி வளர்ச்சிக்காக அனைத்து கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 
டெல்லி சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில், டெல்லி முதல்வராக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 
தொடர்ந்து, மணிஷ் சிசோடியா, சத்தேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோரும் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.பதவியேற்பு விழாவுக்குப் பின், அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், கட்சி, மதம், சாதி பேதமின்றி டெல்லி மக்களுக்காக பணியாற்றுவேன் என உறுதி அளித்தார். டெல்லியின் மகன் பதவியேற்றுள்ளதால், டெல்லி மக்கள் கவலைப்பட தேவையில்லை என கூறிய கெஜ்ரிவால், டெல்லி வளர்ச்சி பணிகளுக்காக பிரதமர் மோடியின் ஆசியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
credit ns7.tv