சனி, 15 பிப்ரவரி, 2020

11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது!

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், கடந்த முறை நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் கொடுத்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்கிறீர்கள் என்று நீதிமன்றம் ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 
அதில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என சக்கரபாணி தரப்பில் கோரப்பட்டது. தமிழக அரசு தரப்பின் பதிலை பதிவு செய்வதாக தெரிவித்த நீதிமன்றம், சபாநாயகர், அவர் அதிகாரத்துக்கு உட்பட்டு, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார் என்றும், அதற்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியாது என்றும் தெரிவித்தது. இது தொடர்பாக சக்கரபாணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் முடித்து வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. 
credit ns7.tv