மணிப்பூர் கலவரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க இம்பால் எம்.எல்.ஏ நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படி என்ன முயற்சியில் அவர் ஈடுபட்டார் என விரிவாக தெரிந்து கொள்வோம்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் மெய்தி சமூகத்தினரை சேர்க்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியின மலைவாழ் மக்கள் பேரணி நடத்தினர். அப்போது, குக்கி மற்றும் மேய்தி என்ற இரு சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, பல்வேறு தீ வைப்பு சம்பவங்களும், நடைபெற்று அது கலவரமாக வெடித்தது. இதனால் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த இனக்கலவரத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை 3 நாட்கள் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த இனக்கலவரம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும். இந்த விசாரணை நிச்சயம் நேர்மையான, நியாயமான விசாரணையாக இருக்கும். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி மணிப்பூரில் அம்மாநில ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவில் மணிப்பூர் மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மணிப்பூர் கலவரத்தின்போது கலவரக்காரர்களால் பல காவல் நிலையத்தில் இருந்து காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில் கலவரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்குமாறு மாநில முதல்வர் உட்பட பல தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இம்பால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுசிந்த்ரோ மேதேயி தனது வீட்டின் அருகே ஒரு பெட்டி ஒன்றை வைத்தார். அதில் காவல் நிலையங்களில் இருந்து எடுத்துச் சென்ற ஆயுதங்களை தயக்கமின்றி இந்த பெட்டியில் போடுங்கள் என எழுதி ஒட்டியிருந்தார். இதனை ஆங்கிலம் மற்றும் மேதேயி மொழியில் எழுதியிருந்தார்.
புதுமையான முயற்சிக்கு பலன் கிடைத்தது. கொள்ளையடிக்கப்பட்ட 130க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் அந்த பெட்டியில் திரும்ப கிடைத்துள்ளன.
source https://news7tamil.live/manipur-riots-nudana-attempt-to-return-looted-weapons.html