திங்கள், 1 மே, 2017

இன்று முதல் அமலுக்கு வருகிறது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்! May 01, 2017

இன்று முதல் அமலுக்கு வருகிறது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்!


ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வீடு மற்றும் மனை வாங்குவோரின் நலன்களைப் பாதுகாக்கவும், கட்டுமான நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும்  மத்திய அரசு, இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், 9 ஆண்டு காத்திருப்பிற்கு பின், ரியல் எஸ்டேட் சட்டம் அமலுக்கு வருவதாகவும், இதுவொரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றும் குறிப்பிட்டார். 

வீடு வாங்குவோரை பாதுகாக்கவும், வீட்டு வசதி நிறுவனங்கள் முறையாக பலன் பெறவுமே இச்சட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். எனினும், இந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்த புதிய சட்டம் தொடர்பான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார்,  அந்தமான் நிக்கோபார், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தாமன் மற்றும் தியு, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் மட்டுமே முதல்கட்டமாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வருகிறது. பிற மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ரியல் எஸ்டேட் துறையில் சொந்த சட்டவிதிகளை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.