வெள்ளி, 26 மே, 2017

பதஞ்சலி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீட்டில் 46 மில்லியன் டாலர் சலுகையா? May 26, 2017

பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 46 மில்லியன் டாலர் அளவு சலுகைகள் காட்டப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, ராகுல் பாட்டியா மற்றும் டாம் லாசெட்டர் ஆகிய இருவர் ராயிட்டர்ஸ் நிறுவனத்திற்காக கட்டுரையொன்றை எழுதியுள்ளனர். அரசு ஆவணங்கள் மற்றும் வருமான வரித்துறையில் பதஞ்சலி நிறுவனம் அளித்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையில், கடந்த 3 ஆண்டுகளில் பதஞ்சலி நிறுவனத்தின் அசூர வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்பது விளக்கப்பட்டுள்ளது.

சுதேசி கோஷத்தை முன்வைத்து விளம்பரங்களை செய்துவரும் பதஞ்சலி நிறுவனம், 2014 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பெரும் வளர்ச்சியை சாத்தியப்படுத்தி உள்ளது. தனது பொருட்களின் விற்பனை மூலம் 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 156 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்த பதஞ்சலி நிறுவனத்தின் வருமானம், 2015 மார்ச் மாதத்தில் 322 மில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது. 

அதாவது, இரு ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் வருமானம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. மே மாதத்தின் தொடக்கத்தில் பேசிய ராம்தேவ், சமீபத்தில் நிறைவடைந்த நிதியாண்டில் பதஞ்சலி நிறுவனத்தின் வருமானம் 1.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதை அக்கட்டுரை எடுத்துக்காட்டியுள்ளது.

2014ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, நிறுவன கட்டுமானம், ஆய்வகங்கள், மூலிகை உற்பத்தியகங்கள் ஆகியவை அமைக்க சுமார் 2,000 ஏக்கர் நிலங்கள் பதஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதிக அளவில் பதஞ்சலி நிறுவனத்திற்கு சலுகை விலையில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் பாட்டியா மற்றும் டாம் லாசெட்டர், பாஜக ஆளும் மாநிலங்களில் சந்தை விலையில் 77 விழுக்காடு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளதையும் ஆவணங்கள் வழியாக எடுத்துக்காட்டியுள்ளனர். பதஞ்சலி நிறுவனத்திற்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில்  46 மில்லியன் டாலர்கள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 306.63 கோடி ரூபாய்.

1995ம் ஆண்டு வெறும் 3500 ரூபாய் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட பதஞ்சலி நிறுவனம், இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் FMCG நிறுவனமாக திகழ்கிறது. 2009-2010ல் 163 கோடி ரூபாயாக இருந்த அந்நிறுவனத்தின் வருமானம் 2016-2017-இல் 10561 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.