சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் தூய்மை, உணவு கூடங்கள், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, பூங்காக்கள் உள்பட பல பகுதிகளை பராமரிக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் வரும் ஜூன் 30ஆம் தேதி முடிவாகும் என தெரிகிறது.
சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 12 நடைமேடைகளும் அதன் புறநகர் ரயில்நிலையத்தில் 5 நடைமேடைகளும் என மொத்தம் 17 நடைமேடைகள் உள்ளன.
இவற்றிலிருந்து நாள்தோறும் 100 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் புழங்கும் ரயில்நிலையம் இது.
பயணிகளுக்கான அதாவது மக்களுக்கான சேவை மையமாக விளங்கும் இந்த ரயில்நிலையத்தை முழுக்க முழுக்க ஒரு வணிக நிறுவனமாக மாற்றிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது மத்திய மோடி அரசு.
அதன்படி, “மறுமேம்பாட்டுத் திட்டம்” என்பதன் பேரில் 3.42 ஏக்கர் நிலப்பரப்பில் சொகுசு விடுதி, உணவகம் மற்றும் பல்வேறு ஏற்பாடுகளுடன் கூடிய ஷாப்பிங் மால் கட்ட முடிவு செய்து தனியாரிடம் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதோடு ரயில்நிலையத்தைப் பராமரிக்கவும் ரயில்நிலைய வளாகத்தை ஒட்டி காலியாகக் கிடக்கும் பல ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்,
தனியார் நிறுவனத்திற்கு 45 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடவும் ஒப்பந்தம் போடப்பட்டு அது ஜூன் மாதம் கையெழுத்தாக இருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் இந்தியா முழுவதுமான மொத்த ரயில் சேவையையே தனியார்மயப்படுத்துவதன் ஒரு படிதான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்படும் என்றும், இதற்காக 45 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் தனியார் வசம் சென்றால் சேவை மனப்பான்மை என்பது மறைந்து லாப நோக்கத்துடன் செயல்படும் நிலை ஏற்படும் என்றும்.
இதனால் பயணிகள் பெருமளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
http://kaalaimalar.in/chennai-central-railway-station-go-to-private/