கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை, சேலம், கரூர் மற்றும் அரியலூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளில் இருந்து மாற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை கிராமப் பகுதிகளில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அந்த பகுதியில் மதுக் கடையை திறக்கக் கூடாதென, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் கடைக்கு எதிராக அமைதியாக போராடும் மக்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தக் கூடாதென்றும் நீதிபதிகள் ஆணையிட்டு, வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.