திங்கள், 20 ஏப்ரல், 2020

77 மில்லியன் டன் உணவு தானியங்களில், ஏன் மக்களின் பசியாற்ற கூடாது : ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பி.சிதம்பரம், இன்று தனது ட்விட்டரில், ” இதயமற்ற அரசாங்கம் மட்டுமே மக்களின் வேதனைகளை துடைக்க முன்வராது”என்று பதிவு செய்துள்ளார்.
சிதம்பரம் தனது ட்விட்டில்,”மக்கள் தங்கள் கையில் இருந்த பணத்தை கடந்து விட்டார்கள் என்பதற்கும், இலவசமாக கிடைக்கும் சமைத்த உணவை சேகரிப்பதற்காக வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. இதயமற்ற அரசாங்கம் மட்டுமே, இந்த நிலையில் ஒன்றும் செய்யாது” என்று பதிவிட்டிருந்தார்.
பசியிலிருந்து அவர்களை ஏன் அரசாங்கம் காப்பாற்ற முடியாது ?  ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் பணப் பரிவர்த்தனை செய்வதன் மூலம் அவர்களின் கவுரவத்தை ஏன் பாதுகாக்க முடியாது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய உணவுக் கழகம் சேமித்து வைத்துள்ள  77 மில்லியன் டன் உணவு தானியங்களில், ஒரு சிறிய அளவை அரசாங்கம் ஏன் தேவைப்படும் குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடியாது,” என்றார்.


“இந்த இரண்டு கேள்விகளும் பொருளாதாரம் மற்றும் தார்மீக அடிப்படையிலான கேள்விகள். பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தவறிவிட்டனர், ”என்று முன்னாள் நிதியமைச்சர் ட்விட்டில் தெரிவித்தார்.
நாடு தழுவிய பொது முடக்க காலத்தில், தினசரி வருவாய் இல்லாமல் உயிர்வாழ்வது கடினம் என்று நினைக்கும் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். தங்கள் சொந்த வீடுகளை அடைய முடியாமல், ஆயிரக்கணக்கான, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு மாநில எல்லைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
முன்னதாக, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அடங்கிய பகுதிகளில் பசி, பட்டினி இருக்கக் கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகமும், MP யும், MLA க்களும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று அறிந்து பெருமிதமடைவதாகவும், எந்தக் குடும்பத்திலாவது உணவு இல்லையென்றால் எங்களுக்கு உடனடியாகத் தெரிவியுங்கள் என்று வேண்டுகொள் விடுத்தார். அதைப் போல் முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகங்கள் போன்ற அமைப்புகளும் அவர்களுடைய உணவுத் தேவைகளை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம் என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.