செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கொரோனாவுக்கு எதிரான போர்: கேரளா சாதித்தது எப்படி?

கொரோனா வைரஸ் பீதி உலகத்தையே ஒரு புரட்டு புரட்டி போட்டுள்ள நிலையில் கடவுளின் நகரம் என அழைக்கப்படும் கேரள மாநிலம், மக்களின் உதவியுடன் அதன் பாதிப்பை குறைத்து சாதித்துக் காட்டியுள்ளது.
மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், உள்ளாட்சி நிர்வாகங்களுடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் அமைப்பு உள்ளிட்டவைகள், மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ளவர்கள், ஹாட்ஸ்பாட் பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவம் சாராத பிற உதவிகளை செய்ய மகளிர் குழுக்கள், தன்னார்வலர்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளதன் மூலம், தொற்று பரவாமல் அடிப்படையிலேயே கட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்று பரவலை கண்காணிக்கும் வகையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை விரிவுபடுத்தும் பொருட்டு 1.71 லட்சம் அமைப்புகள் அமைக்கப்பட்டு வார்டு வாரியாகவும், டிவிசன் வாரியாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த அமைப்பினர், மாநில சுகாதார துறையுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து, வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை உடனடியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் களமிறங்கியது. மற்ற மாநிலங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குபிறகே, அறிகுறிகள் தென்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டு வரும்நிலையில், கேரளாவில், வெளிநாடுகளில் வந்தவர்கள் முன்னதாகவே தனிமைப்படுத்தபட்டு விடுவதால், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. இதன்காரணமாக, தொற்று அதிகளவில் ஏற்படாமல் இருக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பெண்கள் மேம்பாட்டு அமைப்பான குடும்பஸ்ரீ, கொரோனா தொற்று பரவி வரும் அசாதாரண நிலையில், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான முக கவசங்கள், கைக்குட்டைகள் உள்ளிட்டவடகளை தயாரித்து வழங்கி வருகின்றன. இந்த அமைப்பு கடந்த மாதத்தில் மட்டும், சுகாதார துறை பணியாளர்களுக்காக 19.42 லட்சம் மீண்டும் பயன்படுத்தக்க வகையிலான முக கவசங்கள், 4,700 லிட்டர் அளவு சானிடைசர்களை தயாரித்து வழங்கியுள்ளது.
இந்த அமைப்பு, பாதுகாப்பு பொருட்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாது 4,500 அளவிலான 60 வயதிற்கு மேற்பட்டோர்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
குடும்பஸ்ரீ அமைப்பிற்கு என்று 1.9 லட்சம் வாட்ஸ் அப் குரூப்கள் இயங்கி வருவதாகவும், இதில் 22.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நோய்த்தொற்று போன்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான குறுஞ்செய்திகள் இந்த வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் மக்களுக்கு பரப்பப்படுகின்றன.
கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் உத்தரவை தொடர்ந்து மூன்றே நாட்களில் மாநிலம் முழுவதும் 1200 சமுதாய கிச்சன்கள் உடனடியாக துவங்கப்பட்டன
மருத்துவ பணியாளர்களுக்காக குடும்பஸ்ரீ அமைப்பு. முகத்தை பாதுகாக்கும் கவசம் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு வகுக்கும் நெறிமுறைகளை, குடும்பஸ்ரீ, பெண்கள் குழுக்கள், தன்னார்வலர் அமைப்புகள் உள்ளிட்டவைகள் மக்களிடையே கொண்டு சென்று சேர்ப்பதாக மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் இக்பால் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் செயல்பட்டு வரும் 1200க்கும் மேற்பட்ட அமைப்புகள், பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த முன்னரே திட்டமிட்டு செயல்பட்டு வருவதால், கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிபா வைரஸ் பாதிப்பு, தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காலங்களிலும் தங்களால் சிறப்பாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடிவதாக கேரளா உள்ளாட்சி நிர்வாகத்திறன் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜாய் எலமன் தெரிவித்துள்ளார்.
credit indianexpress.com