செவ்வாய், 21 ஏப்ரல், 2020

முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை: சர்ச்சையில் மீரட் மருத்துவமனை

தங்களது புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் முஸ்லீம் நோயாளிகள் கொரோனா பாதிப்பு அற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விளம்பரம் வெளியிட்ட மீரட் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் செயல்பட்டு வரும் வேலன்டிஸ் புற்றுநோய் மருத்துவமனை, அந்த பகுதியின் முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனை சார்பில் ஊடகங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில், இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முஸ்லீம் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், கொரோனா பாதிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சைக்குரிய விளம்பரம், சிறுபான்மையின சமூகத்தினரை தாக்குவதாக உள்ளது எனக்கூறி மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மீரட் போலீஸ் உயர் அதிகாரி அஜய் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விளக்கம் அளித்துள்ள அம்மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் அமித் ஜெயின் கூறியதாவது, அந்த விளம்பரத்தில் தாங்கள் எந்தவொரு சமூகத்தினரையும் குற்றம் சுமத்தவில்லை. அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே தாங்கள் அந்த விளம்பரத்தை வெளியிட்டோம். எங்களுக்கு எதிராக சிலர் சதி செய்துவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்த மருத்துவமனையின் சார்பில் ஹிந்தி ஊடகங்களில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லீம் நோயாளிகள், முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை. மருத்துவமனை ஊழியர்களுடன் மோதல்போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இதன்காரணமாக, மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லீம் நோயாளிகளை கவனித்து வரும் ஆட்கள், கொரோனா பாதிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். இந்த வழிமுறைகள், முஸ்லீம் டாக்டர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், ஷியா பிரிவினர் உள்ளிட்டோருக்கு பொருந்தாது என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களானாலேயே, இந்தியாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கான காரணமாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தப்லிக் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள், மருத்துவமனைகளில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் எச்சில் துப்புவது போன்ற கொடூர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் விதித்த நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தே அதிகளவில் இந்த தொற்று பரவியுள்ளது. அவர்களுக்கு சோதனை நடத்த செல்லும் மருத்துவக்குழுவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
PM Cares fund நிவாரண நிதியில், இந்துக்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினரே அதிகளவில் நிதியுதவி அளித்து வருவதாக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுநாளே, அதே மருத்துவமனையின் சார்பில் அந்த விளம்பரம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. தங்களது விளம்பரம் எந்த சமூகத்தினரையும் புண்படுத்தும் விதத்தில் இல்லை. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பிரதமர் நிவாரண நிதிக்கு, இந்துக்கள், ஜெயின் சமூகத்தினர் போல மற்ற சமூகத்தினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான போரில், அனைவரும் (இந்து, முஸ்லிம், ஜெயின், சீக்கியர், கிறித்தவர்) ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். எங்களது மருத்துவமனை விளம்பரம் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பு இல்லாத முஸ்லீம் நோயாளி பார்வையாளர் குறித்த எவ்வித விளக்கமும் அதில் அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து, இன்சவுலி போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரிஜேஷ் குமார் சிங் அளித்த புகாரின் பேரில், டாக்டர் அமித் ஜெயின் மீது, இபிகோ 188 பிரிவு (உத்தரவை மீறியது), 295ஏ (மதம் சார்ந்து மக்களை பிரிவுபடுத்துவது) மற்றும் 505 (பொதுஇடங்களில் இழிவுபடுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த டாக்டர் அமித் ஜெயின் கூறியதாவது, தாங்கள் எந்த சமூகத்தினரையும் இழிவுபடுத்தவில்லை. எங்களது மருத்துவமனையின் 70 சதவீத நோயாளிகள் முஸ்லீம்களே ஆவர். விளம்பரத்தில் தவறான கருத்து தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தாங்கள் மன்னிப்பும் கோரிவிட்டோம்.இருந்தபோதிலும் எங்களுக்கு எதிராக சிலர் சதி செய்து வருகின்றனர்.அவர்கள் மீது தகவல்தொழில்நுட்ப பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வேலன்டிஸ் புற்றுநோய் மருத்துவமனை, 2000ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 150 படுக்கைகளுடன் புற்றுநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.