சனி, 25 ஏப்ரல், 2020

டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த அண்ணா பல்கலைக்கழகம்!

டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில், நீர்வள ஆராய்ச்சி பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டைம்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களை 17 பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தி வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான டைம்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், நீர்வள ஆராய்ச்சி பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. நிலத்தடி நீர் பயன்பாடு, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பது, கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பது, கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது, ஆறுகளில் ஏற்பட்டுள்ள மாசை கட்டுப்படுத்துவது, பொது சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சென்னை அண்ணா பல்கலைக்கழக நிலவியல் துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள், ஆய்வுக் கட்டுரைகளை மேற்கொண்டு வந்தனர். 

நீர்வளம் மற்றும் சுகாதாரத்தில் இஸ்ரோவின் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி மற்றும் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ந்த டைம்ஸ் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 70.1 மதிப்பெண் வழங்கி நீர்வள பிரிவில் 7-வது இடத்தை வழங்கி உள்ளது. ஐ.ஐ.டி. காரக்பூர், பசியின்மையை உருவாக்குதல் பிரிவில் 6-வது இடத்தையும், ஒட்டுமொத்த தரவரிசையில் 57-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. புதுமையை உருவாக்குதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி.க்கு 16-வது இடமும், பசியின்மையை உருவாக்குதல் பிரிவில் 32-வது இடமும் கிடைத்துள்ளது. டைம்ஸ் நிறுவனம் வெளியிடும் உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படாததால், அதன் முடிவுகளை புறக்கணிப்பதாக சென்னை ஐ.ஐ.டி. உள்பட 7 ஐ.ஐ.டி.க்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
credit ns7.tv