வியாழன், 30 ஏப்ரல், 2020

சுகாதாரத்துறை செயலாளர் தொடர்பான வீடியோ சர்ச்சை - போட்டோகிராபர் மீது எப்ஐஆர் பதிவு

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தொடர்பான எடிட் பண்ணப்பட்ட வீடியோவை, சமூகவலைதளங்களில் பரப்பியது தொடர்பாக, பிரீலாஞ்சர் போட்டோகிராபர் ஸ்ரீராம் என்பவர் மீது சென்னை போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கொரோனா பாதிப்பின் அன்றாட நிகழ்வுகளை, சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சில நாட்கள் வழங்கி வந்தார். அவர் ஒருநாள் பேசிய வீடியோவில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திலேயே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்திருந்தார். மற்றொரு நாள் அளித்த பேட்டியில், மார்ச் 9ம் தேதியே, முதல் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு நாளைய வீடியோக்களையும் ஒன்று சேர்த்து எடிட் பண்ணி, சமூகவலைதளங்களில் சிலர் உலவவிட்டிருந்தனர். இதுபெரும் வைரலாகி வந்தது.
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் மார்ச் மாதம் என்பதற்கு பதிலாக பிப்ரவரி என்று தவறுதலாக தெரிவித்துவிட்டதாக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவை, பிரீலாஞ்சர் போட்டோகிராபராக சென்னையில் பணியாற்றி வரும் ஸ்ரீராம் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
சுமந்த் ஸ்ரீராமன் உள்ளிட்டோர் இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, ஸ்ரீராமை எச்சரித்திருந்த சைபர் கிரைம் போலீசார், அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு பணித்திருந்தது. அவரும் அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டார். பின் மீண்டும் அவர் அந்த வீடியோவை பதிவு செய்திருந்தது தெரியவந்ததால், சைபர் கிரைம் போலீசார், ஸ்ரீராம் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீராம் விளக்கம் : இது எனது சொந்த வீடியோ அல்ல என்றும், சமூகவலைதளங்களில் வந்த விடியோவையே தான் பகிர்ந்ததாகவும், இதில் எனது தவறு எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.