புதன், 17 ஆகஸ்ட், 2016

70 ஆயிரம் பேர் எங்கே போவார்கள்?!' -இணையத்திற்கு எதிராக களமிறங்கிய மீனவர்கள்


கன்னியாகுமரியில் இனையம் வர்த்தகத் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது மத்திய அரசு. ' இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே அழிந்துபோகும். இதனை நம்பியுள்ள 14 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் சிதறடிக்கப்படுவார்கள்' எனக் கொதிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே இனையத்தில் துறைமுகம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்துப் பேசும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ' இந்தத் துறைமுகம் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஒரு மைல்கல். நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. நான்காவது துறைமுகமாக குளச்சலில் அமையவிருக்கிறது. இதனால், அரசுக்கு ரூ.1,500 கோடி ரூபாய் வரையில் செலவுகள் மிச்சப்படுத்தப்படும். இத்துறைமுகம் மூலம் 80 லட்சம் டன் சரக்குகளைப் பரிவர்த்தனை செய்ய முடியும்' என பெருமிதப்பட்டார்.
இந்நிலையில், ' இனையம் துறைமுகத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்பட மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது' எனக் கூறி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன மீனவர் அமைப்புகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, " பன்னாட்டு சரக்குப் பெட்டகமாக இனையத்தை மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. பாரம்பரிய மீன்பிடி தளமான குளச்சல் பகுதியில் துறைமுகம் அமைவதற்கான தேவையே ஏற்படவில்லை. அரசின் கனிமவள நிறுவனத்தைத் தாண்டி, வேறு எதாவது பெரு நிறுவனம் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. கடல்சார்ந்த தொழில்களும் சிறு விவசாயிகளுமே அதிகம் உள்ளனர். வியாபாரம் சார்ந்து சர்வதேச தரத்திலான துறைமுகத்திற்கான அடிப்படை தேவைகளும் இங்கு இல்லை.
ஒவ்வொரு துறைமுகமும் தனக்கான சரக்கு உருவாக்கு தளத்தை பின்புலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது துறைமுக விதிகளின் அடிப்படை அம்சம். அங்கு உருவாகும் சரக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தாலும் சென்னை, கொச்சி மற்றும் வல்லார்பாடம் துறைமுகத்தாலும் பங்கிடப்பட்டு வருகின்றன. புதிய வர்த்தக துறைமுகத்திற்கு மணல் நிரப்பப்படும்போது பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும்.
தேவையற்ற இந்தப் பன்னாட்டு முனையத்திற்குத் தேவையான நான்குவழிச் சாலை மற்றும் ரயில் பாதைக்குத் தேவையான நிலங்கள் அனைத்தும் ஏழை மீனவர்களின் குடியிருப்பு வீடுகளும், விவசாயிகள் நிலங்களும் கையகப்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய்பட்டணம் முதல் குளச்சல் வரையில் வாழும் சுமார் 14 ஆயிரம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த 70,000 பேர் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். மேலும் கடல் சார்ந்த சங்கு, சிப்பி தயாரிக்கும் தொழில்களும் முடங்கும் அபாயம் உள்ளது.
துறைமுக கட்டுமான பணியின் போது தேவைப்படும் நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் எனவும், சாலைகள் நிறுவும் பணியின் போது நாளொன்றுக்கு 10,000 லிட்டர் நீர் தேவைப்படும் எனவும் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் அபாயம் உள்ளது. மீனவ மக்களைப் பெரிதும் பாதிக்கும் இனையம் வர்த்தகத் துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதே மீனவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது" எனக் கொதித்தார் ஜவாஹிருல்லா.
'மக்களின் எதிர்ப்பு அவசியமற்றது' எனத் தொடர்ந்து பேசி வருகிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மீனவ மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
-ஆ.விஜயானந்த
source:
http://www.vikatan.com/…/67124-fishermans-opposed-enayam-po…