நாடு முழுவதும் மொத்தம் 23 பல்கலைக்கழகங்கள், போலியானவை என்று யூ.சி.ஜி தெரிவித்துள்ளது.
யூ.ஜி.சி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ நாடு முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளன. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்தியாவில் மொத்தம் 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பட்டியலில் தலைநகர் டெல்லிதான் முதல் இடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 66 கல்லூரிகள் போலியானவையாம். முக்கியமாக நாடு முழுவதும் உள்ள 23 போலி பல்கலைக்கழகங்களில் ஏழு பல்கலைக்கழகங்கள் டெல்லியில் தான் உள்ளதாம்.
இந்த கல்லூரிகள் அனைத்தும் டிகிரி சான்றிதழ்களை வழங்க தகுதியற்றவை. அவை வழங்கும் சான்றிதழ்கள் போலியானவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் போலி கல்வி நிறுவனங்கள் அதிகளவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் அந்த கல்லூரிகளில் சேர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. போலி கல்லூரிகளின் விபரம் குறித்து அறிய www.ugc.ac.in, www.aicte-india.org என்ற இணையதளங்களை காணலாம்.