வாராக் கடன்களை வசூலிப்பதற்காக இயற்றப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் குறிப்பிட்ட தொழிலதிபர்கள் செலுத்தாத வாராக் கடன்களின் அளவு சுமார் 7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வங்கிகளில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா உள்ளிட்டோர் இந்த பட்டியலில் அடங்குவர்.
இந்த வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் வகையில் வங்கி ஒழுங்கு முறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக அவசரச் சட்டம் இயற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு அவசரச் சட்டம் உருவாக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.