புதன், 30 மே, 2018

ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்! May 30, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால்பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த வருட இறுதியில் தான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த். ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள இவர் சமீபத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் போவதாகவும், என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் கூறி இன்று மதியம் தூத்துக்குடி  வந்தடைந்தார். 

அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மக்கள் சக்திக்கு முன்னால், எந்த சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி உள்ளனர். சமூக விரோதிகளிடம் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் எந்த தொழிலும் வளமும் பெருகாது. ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விரோதிகள் தான். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை எரித்ததும் சமூக விரோதிகள் தான்.

உளவுத்துறையின் தவறால் தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர்களை விட்டுவிடக் கூடாது. எல்லா பிரச்சனைகளிலும் முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்வது நியாயமாகாது. இத்தனை போராட்டத்திற்குப் பின்னரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் ஆலை நிர்வாகத்திற்கு வரவே கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்தனர்; புனிதப் போராட்டம் ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது. ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை.

சமூக விரோதிகளை ஜெயலலிதா வழியில் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறிய பின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி அறிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறிவந்தார். 

அப்போது பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தைப் பார்த்து யார் நீங்கள் என்று கேட்டுள்ளார். ரஜினிகாந்த் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி மாறுவேடம் அணிந்து நகர்வலம் சென்று மக்களின் நிலையை அறிந்துள்ளதாகவும், மாறுவேடமின்றி சென்றால் மக்கள் கூட்டம் சூழ்ந்து விடும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்தைப் பார்த்து தூத்துக்குடி இளைஞர் நீங்கள் யார் என்று கேட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இளைஞர் வேண்டுமென்று அப்படி கேட்டாரா? இல்லை சினிமாவில் இருக்கும் ரஜினிக்கும் நிஜத்தில் இருக்கும் ரஜினிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால் அப்படி கேட்டாரா என்பது தெரியவில்லை.