வியாழன், 31 மே, 2018

#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு? May 31, 2018

ரஜினியின் அரசியல் நகர்வை விட முக்கியமானது நேற்று தூத்துக்குடியில் நடந்த சம்பவம்... ரஜினி என்ற மிகப்பெரிய ஹீரோவை நோக்கி யார் நீங்க என இளைஞர் ஒருவர் கேட்க காரணம் என்ன? 

யார் நீங்க?


நான் தான்பா ரஜினி... நேற்றைய தினம் இது தான் இந்திய அளவில் எதிரொலித்த ஓர் வார்த்தை 20 வயதை கடந்த இளைஞனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் நிலையில் தான் ரஜினி இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். இருந்தும் நீங்கள் யார் என்ற கேள்வியை அந்த இளைஞன் எழுப்ப காரணம் என்ன...

கேள்விகளால் துளைத்தெடுக்கப்படும் ரஜினி

ரஜினி நடித்த படங்கள் வெளிவந்து விட்டாலே அதனை திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட உச்சநட்சத்திரம். அப்படிப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் இப்படி ஒரு வரவேற்பை நிச்சயம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்... சினிமாவில் ஹீரோவாக, தலைவனாக முன்னிறுத்தப்பட்ட ரஜினி தற்போது பொது வெளியில் கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகிறார். காரணம் அவர் அறியாதது அல்ல... மக்கள் பிரச்சனைகளில் அவர் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் வெளிப்பாடே இது என்பது கண்டிப்பாக ரஜினிக்கு தெரிந்திருக்கும்  

ஒரு நிமிடம் தலை சுற்றியது 

கொள்கை பற்றி கேட்கிறார்கள் தலை சுற்றுகிறது என்பதில் தொடங்கி ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிரான அலை சமூக வலைதளங்களில் வீசி கொண்டு தான் இருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு எழும் போதெல்லாம், இந்த மண்ணின் பிரச்சனைகளுக்காக அவர் என்ன செய்தார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே தான் இருக்கிறது. காவிரி போராட்டத்தின் போது காவலர் தாக்கப்பட்டது தொடர்பாக ரஜினி வெளியிட்ட வீடியோவிற்கு கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. 

போராட்ட கூடாது

போராட்டம் எல்லாம் செய்ய வேண்டாம், தேர்தல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய போதும், அவரது அரசியல் நிலைபாடு குறித்த கேள்விகள் எழ தொடங்கின. அரசியலில் ரஜினி யாருக்கோ சாமரம் வீச போகிறார் என்ற ஆருடங்கள் கணிக்கப்படுகின்றன என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வை. நீங்க யாரு... சென்னையிலிருந்து தூத்துக்குடி வர 100 நாள் ஆகி விட்டதா என்ற அந்த இளைஞனின் கேள்வியை, ரஜினியின் அரசியல் நிலைபாட்டோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்பதே அவர்கள் வைக்கும் வாதம். 

இளைஞனின் கேள்விக்கான பதில்

சினிமாவில் ரஜினியை கொண்டாடிய இளைஞர் சமூதாயம் இன்று அவரை ஊடகங்கள் முன்பு கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறது. யாருக்கான தலைவராக தன்னை முன்னிறுத்த போகிறார் என்பதே நீங்கள் யார் என்ற அந்த இளைஞனின் கேள்விக்கான பதிலாக இருக்கும்.