புதன், 23 மே, 2018

புதிய கடிதம்!

பீஜே அவர்களின் புதிய கடிதம்!
==============
உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆடியோ சம்மந்தமாக புகார் எதுவும் வராமல் நாமாக வலியச் சென்று விசாரிக்கும் நடைமுறை இல்லை என்பதால் எனது விலகலைத் திரும்பப் பெறுமாறு உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்து வருகிறார்கள்.
நீங்கள் விசாரணை நடத்தி நான் குற்றமற்றவன் என்று நிரூபித்தாலும் அதன் பின்னரும் நான் விலகலைத் திரும்பப் பெற வேண்டாம் என்பது தான் என் குடும்பத்தினரின் எண்ணமாக உள்ளது.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
என் மீது சுமத்தப்பட்டது போல் யார் மீது அவதூறு பரப்பப்பட்டாலும் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். நானும் பாதிக்கப்படுகிறேன். ஆனால் எனக்கு முன்பு போல் வலிமையான இதயம் இல்லை. இரு முறை அட்டாக் வந்து இரு தடவையும் ஆஞ்சயோ பண்ணியதால் என்னைப் பற்றிய கேவலமான விமர்சனங்கள் நூற்றுக் கணக்கான நபர்களால் பரப்பும் போது இதயம் மிகவும் பாதிக்கிறது.
மேலும் என்னுடன் பயணித்தவர்களே நம் ஜமாஅத்தை விட்டுப் போன பின் இது போல் அதிகம் பரப்புவதைக் காண்கிறேன். இதை நேற்று வரை பொய் என்று சொன்னவர்கள் இப்போது மெய் என்று வாதிடும் போது கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் என் மீது அன்பு கொண்ட மக்கள் எதிரிகளுக்குப் பதில் கொடுப்பதிலேயே தமது நேரங்களைச் செலவிடுகிறார்கள். ஆக்கப்பூர்வமான பணிகள் எதிலும் ஈடுபட முடியாமல் என்னைப் பற்றி எதிர்த்தும், ஆதரித்தும் எழுதுவது மட்டுமே முக நூலில் மலிந்து கிடக்கின்றது. இதுவும் என்னை மிகவும் பாதிக்கிறது.
அது மட்டுமில்லாமல் என் மீது கொண்ட அன்பின் காரணமாக எனக்கு எதிராக வதந்தி பரப்புவோரைத் தரக்குறைவாக விமர்சிப்பதையும், எதிரிகளின் குடும்பப் பெண்களைக் கேவலமாகப் பேசுவதையும் காண முடிகிறது. யார் என்ன செய்தாலும் அனைத்தும் நான் செய்வதாகவே பார்க்கப்படுகிறது. அதை ஒட்டியும் விமர்சனங்கள் நீள்கின்றன.
பல மாதங்களுக்குப் பின் நான் விலகல் அறிவிப்பு செய்த அன்று தான் நிம்மதியான தூக்கம் வந்தது. எல்லா பாரத்தையும் இறக்கி வைத்தது போல் அன்று தான் உணர்ந்தேன்.
இதை விட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் எதிரிகள் பீஜே தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று கருதுகிறார்கள். என்னை முடக்கினால் தவ்ஹீத் பிரச்சாரம் முடங்கி விடும் என்று கணக்கிடுகிறார்கள்.
தவ்ஹீத் சகோதார்களில் சிலரும் அந்த மன நிலையில் தான் உள்ளனர்.
இதை உடைத்து ஆக வேண்டும். மக்களால் அதிகம் அறியப்பட்ட ஒருவரால் தான் இந்த ஜமாஅத்தைக் கொண்டு செல்ல முடியும் என்பதைப் பொய்யாக்க வேண்டும்.
இந்த ஜமாஅத்தில் நல்ல ஆய்வுத் திறன் மிக்க அறிஞர்கள் பலர் உள்ளனர். தியாகமும்,அர்ப்பணிப்பும் செய்பவர்கள் உள்ளனர். அந்த நல்லறிஞர்களைக் கொண்டு இந்த ஜமாஅத்தைச்சிறப்பாக வழிநடத்த முடியும்.
இது கொள்கைக்கான ஜமாஅத் ஆகும். பீஜே இல்லாவிட்டாலும் கொள்கைக்காக இந்த ஜமாஅத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்கள். வீரியமாக செயல்படுவார்கள்.
எனவே என்னை தயவு செய்து வற்புறுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். என் விலகலில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
பீ.ஜைனுல் ஆபிதீன்