திங்கள், 11 பிப்ரவரி, 2019

மநீம தலைவர் கமல்ஹாசன் மீது திமுக நாளேடு கடும் தாக்கு February 11, 2019

source: ns7.tv
Image
திமுக மீதான கமல்ஹாசனின் விமர்சனத்திற்கு பதிலடியாக முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் கமல்ஹாசன் காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

நரித்தனத்தில் பெயர் போன ரத்த வார்ப்பல்லவா அவர் என்றும், ஜென்மத்தோடு பிறந்ததை எதைக் கொண்டும் சீர்படுத்த முடியாது என்பார்கள் எனவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியுள்ளார் கலைஞானி என்றும் கமல்ஹாசன் விமர்சிக்கப்பட்டுள்ளார். 

புரட்சி நடிகர்கள் கூட வருமானவரித்துறை மிரட்டலுக்கு பயந்து வளர்த்த கட்சியின் மார்பில் பாய்ந்த வரலாற்றை எதிர்கொண்டு, கட்சியை காத்துவந்த திமுகவினரை, இந்த பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் குறித்து மட்டுமே முரசொலி விமர்சித்துவந்த நிலையில், கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின் முதன் முறையாக முரசொலி அவரை விமர்சித்துள்ளது.

இதனிடையே, இன்று திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மநீம தலைவர் கமல்ஹாசனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது அங்கு வந்தவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.