திங்கள், 18 பிப்ரவரி, 2019

“கமல்ஹாசனின் அரசியல், அரைவேக்காட்டுத்தனம்”...முரசொலி கடும் விமர்சனம்... February 18, 2019

source ns7.tv
Image
திமுகவின் ஊராட்சி சபை கூட்டத்தை குறைகூறிய கமல்ஹாசனின் அரசியல், அரைவேக்காட்டுத்தனம் என முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. 
கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதை போல கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுவதாக முரசொலியில் கூறப்பட்டுள்ளது. கமல் பேசுவது புரியாது என்றும், அவரது பேச்சை கேட்போர் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர் ஒருநாளும் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டார் என்றும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தை ஸ்டாலின் காப்பியடித்ததாகக் கூறியதன் மூலம் கமல்ஹாசன் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளதாகவும் முரசொலி நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. 
கிராம சபை கூட்டத்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே தனது அமைச்சர்களை கொண்டு நடத்தியுள்ளதாகவும் முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை என்றும், அந்த காலகட்டத்தில் அவர் கதாநாயகியுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்திருப்பார் என்றும் முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக வரலாற்றை கமல்ஹாசன் படித்தறிய வேண்டும் என்றும் முரசொலியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கி எதனை நோக்கிச் செல்கிறோம் என்று தெளிவற்றுத் திரியும் கமல்ஹாசன் மற்றவர்களை பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக்கூத்து என்றும் முரசொலியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.